*பேறுகள் உனக்கு மட்டுமல்ல...*
அவளைப் பலவீனப்படுத்த
எல்லா வியூகங்களையும் வகுத்தபின்பும்
அவளை உள்நிறுத்தி எதற்காக
இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்?
போரிலும் பகையிலும் முதல்பொருளாய்
அவளையே சூறையாடினாய்
அவளுக்கே துயரிழைத்தாய்
உன்னால் அனாதைகளாக்கப்பட்ட
குழந்தைகளையெல்லாம் அவளிடமே ஒப்படைத்தாய்
தலைவனாகவும் தேவனாகவும் நீ
தலை நிமிர்ந்து நடந்தாய்
எல்லா இருள்களின் மறைவிலும்
நீயே மறைந்திருந்தாய்
ஒளியின் முதல் கிரணத்தையும்
உன் முகத்திலேயே வாங்கிக்கொண்டாய்
உனதடி பணிந்து தொழுவதில் அவளுக்கு
ஈடேற்றம் கிடைக்குமென்றாய்
கலாசாரம் பண்பாடு எனும் அரிகண்டங்களை
அவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்
உனது மயக்கங்களில்
தென்றல் மலர் இசை
தேவதை அம்சங்களென
அவளிடம் கண்டவையெல்லாம் பின்னர்
மாயைகளெனப் புலம்பவும் தொடங்கினாய்
அவளிடமிருந்த அனைத்தையும் பறித்துக்கொண்டு
சிகரங்களில் ஏறி நின்றாய்
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு காணச் சொன்னது
உனக்கு மட்டுமென எப்படிக் கொண்டாய்?
"பஹீமா ஜஹான்"
(இலங்கை கவிதாயினி)
("ஒரு கடல் நீரூற்றி")
நன்றி: இந்நேரம்.காம்
**************************************************************************************************
சுஜாதா - எல்லோர்க்கும் பிடித்தமான எழுத்தாளர்,
ஆஸ்தான குரு, செல்லமாய் "வாத்தி"
இலக்கியத்திற்கான இவரது பங்களிப்புகளில் சிறுகதை,
தொடர்கதை, நாவல், கட்டுரை, நாடகம் என்ற ஏதேனும் ஒன்று
கூட பிடிக்காதவர்கள் இருப்பின் அபூர்வம். எதை எழுதினாலும்
சுவாரஸ்யமாக எழுதும் வித்தை தெரிந்தவர். அதனாலேயே நீண்ட
காலம் தனக்கென ஒரு இடத்தில் எழுத்துலகில் ராஜாவாய்
இருந்தவர். மூன்று வருடத்துக்கு முன் இறந்து போனார்.
இன்று அவரது நினைவு நாள் ( 27-02-2008).
அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் தான் என்னை எழுதத்
தூண்டியது என்பதை மீண்டும் இங்கொரு முறை இன்னொரு
முறை பதிவு செய்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். நிஜத்திற்கும், கற்பனைக்கும் இடையேயான ஆச்சரியங்களே சிறுகதைகளைத் தீர்மானிக்கின்றன என்ற ஒற்றை வரியில் நிறைய கற்றுக்
கொடுத்தவர்.
விகடன் பிரசுரம் ஏன் எதற்கு எப்படி இன்றைய வரைக்கும்
விகடன் நிறுவனத்துக்கு லாபமூட்டித் தரும் கேள்வி பதில்
புத்தகம். கேள்வி பதிலைக் கூட சுவாரஸ்யமாக கொண்டு
செல்ல முடியும் என ஆச்சரியப்படுத்தியவர்
எ.கா : "நீங்கள் ஏன் அருவிகள் பற்றி எதுவும் சொல்வதில்லை"
சுஜாதா : நான் ஃபால்ஸ் (falls) இன்ஃபார்மேஷன் எல்லாம்
தருவதில்லை"
நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். சுஜாதா மறைவின்
போது "திரும்பி வராத நதி" என்ற தலைப்பில் ரியாத் தமிழ்ச்சங்க எழுத்துக்கூடத்தில் ஐந்து கட்டுரைகள் எழுதினேன். அதில் சொல்லாத ஒன்றை இங்கு சொல்லப் போவதில்லை. இருப்பினும்
இன்றைய அவரது நினைவு நாளில் எதாவது சொல்ல வேண்டுமே
எனத்தோன்றிய போது வந்தவை இவை. தோதாக வெண்பா
வடிவத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஏதோ நம்மால் முடிந்தது.
சுஜாதா என்னும் ஆளுமை.
சிறுகதை, நாவல் சிறப்பாய் தொடர்கள்
அருவியாய் கொட்டும் அருமை தமிழில்
அழுத்தமாய் முத்திரை ஆழப் பதித்தாய்
எழுத்தில் குருநாதன் நீ.
கற்றதும் பெற்றதும் கற்பதில் தேடல்
முற்றுப் பெறாத கணிப்பொறி ஆர்வம்
வற்றி விடாத இளமை எழுத்தினில்
சற்றும் கிடையா(து) சலிப்பு.
கணிப்பொறி நுட்பம் , கவிதை வடிவம்,
இனிவரும் கால இணையத்தின் மாற்றம்
இதைவிட யாரும் எழுதிட வில்லை
எதையும் விடவில்லை நீ
திரைப்படம் ஏதும் இயக்கிய தில்லை.
திரைக்கதைப் பற்றி விளங்கிடத் தந்தாய்.
உரைநடை பாணியில் ஓரிடம் பெற்றாய்
வரைமுறை அன்றி வனைந்து.
கதையில் எளிமை கருத்தில் புதுமை
எதையும் எளிதாய் எழுதும் திறமை
முழுவதும் சொல்ல முயல்கிறேன் மெல்ல
அலுக்கவே இல்லை எனக்கு.
"உதயம் தென்னிந்திய கலாச்சார கழக"த்திலிருந்து
'லக்கி ஷாஜஹான்' ரியாத், சவுதி.