facebook

ஞாயிறு, பிப்ரவரி 27, 2011

பேறுகள் உனக்கு மட்டுமல்ல!!!




*பேறுகள் உனக்கு மட்டுமல்ல...*

அவளைப் பலவீனப்படுத்த
எல்லா வியூகங்களையும் வகுத்தபின்பும்
அவளை உள்நிறுத்தி எதற்காக
இன்னுமின்னும் வேலிகளை எழுப்புகிறாய்?

போரிலும் பகையிலும் முதல்பொருளாய்
அவளையே சூறையாடினாய்
அவளுக்கே துயரிழைத்தாய்

உன்னால் அனாதைகளாக்கப்பட்ட
குழந்தைகளையெல்லாம் அவளிடமே ஒப்படைத்தாய்
தலைவனாகவும் தேவனாகவும் நீ
தலை நிமிர்ந்து நடந்தாய்

எல்லா இருள்களின் மறைவிலும்
நீயே மறைந்திருந்தாய்
ஒளியின் முதல் கிரணத்தையும்
உன் முகத்திலேயே வாங்கிக்கொண்டாய்

உனதடி பணிந்து தொழுவதில் அவளுக்கு
ஈடேற்றம் கிடைக்குமென்றாய்
கலாசாரம் பண்பாடு எனும் அரிகண்டங்களை
அவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்

உனது மயக்கங்களில்
தென்றல் மலர் இசை
தேவதை அம்சங்களென
அவளிடம் கண்டவையெல்லாம் பின்னர்
மாயைகளெனப் புலம்பவும் தொடங்கினாய்

அவளிடமிருந்த அனைத்தையும் பறித்துக்கொண்டு
சிகரங்களில் ஏறி நின்றாய்
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு காணச் சொன்னது
உனக்கு மட்டுமென எப்படிக் கொண்டாய்?

"பஹீமா ஜஹான்"
(இலங்கை கவிதாயினி)
("ஒரு கடல் நீரூற்றி")
நன்றி: இந்நேரம்.காம்

**************************************************************************************************


சுஜாதா - எல்லோர்க்கும் பிடித்தமான எழுத்தாளர்,
ஆஸ்தான குரு, செல்லமாய் "வாத்தி"

இலக்கியத்திற்கான இவரது பங்களிப்புகளில் சிறுகதை,
தொடர்கதை, நாவல், கட்டுரை, நாடகம் என்ற ஏதேனும் ஒன்று
கூட பிடிக்காதவர்கள் இருப்பின் அபூர்வம். எதை எழுதினாலும்
சுவாரஸ்யமாக எழுதும் வித்தை தெரிந்தவர். அதனாலேயே நீண்ட
காலம் தனக்கென ஒரு இடத்தில் எழுத்துலகில் ராஜாவாய்
இருந்தவர். மூன்று வருடத்துக்கு முன் இறந்து போனார்.

இன்று அவரது நினைவு நாள் ( 27-02-2008).

அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் தான் என்னை எழுதத்
தூண்டியது என்பதை மீண்டும் இங்கொரு முறை இன்னொரு
முறை பதிவு செய்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். நிஜத்திற்கும், கற்பனைக்கும் இடையேயான ஆச்சரியங்களே சிறுகதைகளைத் தீர்மானிக்கின்றன என்ற ஒற்றை வரியில் நிறைய கற்றுக்
கொடுத்தவர்.

விகடன் பிரசுரம் ஏன் எதற்கு எப்படி இன்றைய வரைக்கும்
விகடன் நிறுவனத்துக்கு லாபமூட்டித் தரும் கேள்வி பதில்
புத்தகம். கேள்வி பதிலைக் கூட சுவாரஸ்யமாக கொண்டு
செல்ல முடியும் என ஆச்சரியப்படுத்தியவர்

எ.கா : "நீங்கள் ஏன் அருவிகள் பற்றி எதுவும் சொல்வதில்லை"

சுஜாதா : நான் ஃபால்ஸ் (falls) இன்ஃபார்மேஷன் எல்லாம்
                  தருவதில்லை"

நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். சுஜாதா மறைவின்
போது "திரும்பி வராத நதி" என்ற தலைப்பில் ரியாத் தமிழ்ச்சங்க எழுத்துக்கூடத்தில் ஐந்து கட்டுரைகள் எழுதினேன். அதில் சொல்லாத ஒன்றை இங்கு சொல்லப் போவதில்லை. இருப்பினும்
இன்றைய அவரது நினைவு நாளில் எதாவது சொல்ல வேண்டுமே
எனத்தோன்றிய போது வந்தவை இவை. தோதாக வெண்பா
வடிவத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஏதோ நம்மால் முடிந்தது.

சுஜாதா என்னும் ஆளுமை.

சிறுகதை, நாவல் சிறப்பாய் தொடர்கள்
அருவியாய் கொட்டும் அருமை தமிழில்
அழுத்தமாய் முத்திரை ஆழப் பதித்தாய்
எழுத்தில் குருநாதன் நீ.

கற்றதும் பெற்றதும் கற்பதில் தேடல்
முற்றுப் பெறாத கணிப்பொறி ஆர்வம்
வற்றி விடாத இளமை எழுத்தினில்
சற்றும் கிடையா(து) சலிப்பு.

கணிப்பொறி நுட்பம் , கவிதை வடிவம்,
இனிவரும் கால இணையத்தின் மாற்றம்
இதைவிட யாரும் எழுதிட வில்லை
எதையும் விடவில்லை நீ

திரைப்படம் ஏதும் இயக்கிய தில்லை.
திரைக்கதைப் பற்றி விளங்கிடத் தந்தாய்.
உரைநடை பாணியில் ஓரிடம் பெற்றாய்
வரைமுறை அன்றி வனைந்து.

கதையில் எளிமை கருத்தில் புதுமை
எதையும் எளிதாய் எழுதும் திறமை
முழுவதும் சொல்ல முயல்கிறேன் மெல்ல
அலுக்கவே இல்லை எனக்கு.

"உதயம் தென்னிந்திய கலாச்சார கழக"த்திலிருந்து
'லக்கி ஷாஜஹான்' ரியாத், சவுதி.


 

வியாழன், பிப்ரவரி 24, 2011

சவுதியில்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!


சவுதியில் சாலை விதிகள்!!

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை !!

சவுதி அரேபியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் வாகன
விபத்துகளை கட்டுப் படுத்த தானியங்கி முறையில் செயல்படும் கேமராக்களை சாலைகளில் சவுதி அரசாங்கம் நிறுவியுள்ளது.
இந்த கேமராக்கள் சவுதி அரேபியாவில் உள்ள உள்துறை
அமைச்சகத்தில் கீழ் இயங்கும் தேசிய தகவல் மையத்துடன்
இணைந்து செயல் பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் பெயர்
தான் ‘ஸாஹர்’ (SAHER)  http://www.saher.gov.sa/e_Default.aspx

கடந்த ஆண்டு தலை நகர் ரியாதில் நிறுவி வெற்றிகரமாக செயல்படுவதைத் தொடர்ந்து தற்போது கிழக்கு மாகாணம்
'தம்மாம்' மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களிலும் செயல்படத் தொடங்கியுள்ளது.

சவுதி அரசாங்கத்தின் புள்ளி விபரப்படி:

* ஒவ்வொரு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருவர் வாகன
   விபத்தில் உயிரிழக்கிறார்.

* சராசரியாக 18 பேர் அன்றாடம் மரணிக்கிறார்கள்.

* ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருவர் விபத்தின் மூலம்
    ஊனமடைகிறார்கள்.

* 2009 ஆம் ஆண்டு மட்டும் 485931 விபத்துகள் பதிவாகியுள்ளன.

விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்தபோது 60% விபத்துகள் முரட்டுத்தனமாக வாகனங்களை ஒட்டியதாலும், 30% சிகப்பு
விளக்கின் போது நிறுத்தாமல் போனதாலும், 8% அங்கீகரிக்கப்
படாத வளைவுகளாலும் ஏற்பட்டது. என அறிக்கை கூறுகிறது.
மேலும், நிர்ணயிக்கப் பட்ட வேகத்தை விட கூடுதலான வேகம், முன்னறிவிப்பின்றி திடீரென்று நிறுத்துதல், மொபைலில் பேசிக்
கொண்டே வாகனம் ஒட்டுதல் போன்றவையே முக்கிய காரணங்-
களாகவும் புள்ளி விபரக் கணக்கு நமக்கு தெரிவிக்கின்றது.

பெற்றோர், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களை பிரிந்து பொருளாதாரம் தேடி நாம் இங்கு வந்திருக்கின்றோம். பொருளா-
தாரத்தை தேடி வந்த நம் மக்களில் எத்தனை பேர் இதே வாகன
விபத்தில் உயிரிழந்திருக்கிறார்கள் ? எவ்வளவு பேர் ஊனமுற்றி- ருக்கிறார்கள்? நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் அவர்களை
நாமும் நினைக்க வேண்டாமா?

இந்த நிலை மாற வேண்டுமானால் வாகனம் ஓட்டும் ஒவ்வொரு-
வரும் நிதானம் கடைபிடிக்க வேண்டும். அதன் மூலமே விபத்துக்
களை குறைக்க முடியும். எனவே, நாம் அனைவரும் தற்போது
நிறுவப் பட்டிருக்கின்ற ‘ஸாஹர்’. திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு
அளிக்க வேண்டும். அதன் விதிமுறைகளை மதிக்க வேண்டும்.
அதற்கு முன் 'ஸாஹர்' பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள
வேண்டும்.

‘ஸாஹர்’ என்பது உயர்தொழில் நுட்பங்களை கொண்ட தானியங்கி கேமராக்களின் மூலம் சாலைக் கட்டுப்பாடுகளை செய்கின்ற முறையாகும். வாகன நெருக்கடிகள், விபத்துகள், சிக்னல் விளக்குகளை மீறுதல், தடம் மாற்றி மாற்றி ஒட்டுதல், சாலைகளில் ஓரங்களில் ஒட்டுதல் போன்றவைகளை குறிப்பாக அறிந்து அதனை புகைப்படம் எடுக்கும் ஆற்றல் கொண்டது.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட டிராக்குகளில் வாகன ஓட்டிகள் தவறு செய்யும் போது, ஒரே நேரத்தில் அவைகளை படம் பிடிக்கும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது. எவ்வளவு வேகமாக சென்றாலும், வாகனத்தின் எண்கள் உள்பட தெளிவாக படம் பிடிக்கும் உயர் தொழில் நுட்பம் கொண்ட கேமராக்கள் பயன்படுத்தப் படுகின்றன.

இந்த புகைப்படங்கள் உடனயாக தானியங்கி முறையில் தகவல் மையத்திற்கு தெரிவிக்கின்றன. அவை தேசிய தகவல் மையத்தின் ஆவணங்கள் மூலம் குறிப்பிட்ட வாகன ஒட்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவை ஃபேக்ஸ் மற்றும் எஸ் எம் எஸ் மூலம்
அவருக்கு தெரியப்படுத்துகின்றது.

அபராதத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் அபராதம்
அதன் மடங்குகளாகப் பெருகும் அபாயம் இருப்பதால், உடனடியாக அபராதத்தை செலுத்துவது புத்திசாலித் தனமாகும். எனவே
மொபைல் எண், ஈ-மெயில் முகவரிகளை மாற்றக் கூடியவர்கள் அவ்வப்போது தங்களது தகவல்களை அருகிலுள்ள அருகிலுள்ள போக்குவரத்து தகவல் மையத்தில் தெரிவிப்பதன் மூலம்
தங்களுக்கு அபராதம் விதிப்பதை உடனடியாக அறிந்து
கொள்ளலாம்.


மேலும், இத்திட்டத்தின் மூலம் வாகனங்கள் எந்தெந்த பகுதிக்கு சென்றிருக்கின்றன, எங்கு இருக்கின்றன போன்ற விபரங்களையும் கூடுதலாக அறிய முடியும். இதன் மூலம் வாகனங்களின் திருட்டை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அதே போல சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்கள் யாரின்
பேரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அவருக்கே அபராதம்
விதிக்கப் படுவதால், வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றவர்கள் ஓட்டுவதற்கு தங்களின் வாகனங்களை கொடுப்பதை தவிர்க்க
வேண்டும்.

தங்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டிருக்கிறதா என்பதை பின்வரும் முறையில் தேய்ந்து கொள்ளலாம்.

* 01 - 2928888 என்ற தொலைபேசி எண்ணுக்கு பேசுவதன் மூலம்.

* சவுதி உள்துறை அமைச்சகத்தின் இணைய தளத்திற்கு செல்வதன் மூலம்.www.moi.gov.sa/wps/portal

= *56* இக்காமா நம்பர் என்ற (ex : *56*1234567890) என்ற நம்பரை
கீழ்க்கண்ட நம்பர்களுக்கு எஸ் எம் எஸ் செய்வதன் மூலம் :

= STC - 88993

= MOBILY - 625555

அபராதத்தை அவ்வப்போது அறிந்து அதை சரி செய்வதன் மூலம் அபராதம் இரட்டிப்பாவதை தவிர்க்கலாம்.

உலகெங்கிலும் சாலை விதிகளை கடைபிடிப்போம்.
                                 விபத்துக்களை தவிர்ப்போம்.

**************************************************************************************************
மேலும் தகவல்களுக்கு :

இந்திய பிரடெர்னிடி ஃபோரம் தம்மாம் (வெளிநாடு வாழ் இந்தியர்-
களுக்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு அமைப்பு)

உங்களது பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு தொடர்பு
கொள்ள :

தம்மாம் : 0535791233, அல்கோபர் : 0546087261, சிஹாத் : 0509027345
ஜூபைல் : 0569304589.

Email : iff.dammam.tamil@gmail.com

செவ்வாய், பிப்ரவரி 22, 2011

இடிந்த தேசத்தில் இருந்து ஓர் இடிமுழக்கம்

பரங்கிப்பேட்டை (Portonovo) கைமணம் சாப்பாட்டில் இருப்பது
போல், இந்த ஊர் எழுத்தின் வீச்சு படிக்கும் மனங்களை
கிறங்கடிக்கும். ஏற்கனவே இந்த ஊரின் புகழை தன் எழுத்தில்
தக்க வைத்துக் கொண்டிருக்கும் நம்ம தல ‘ஜெயலானி’ய
தெரியாதவர்கள் இந்த 'படிக்கும்' உலகத்தில் மிக சொற்பமே!!

இப்ப அதே ஊரை சேர்ந்த நண்பர் இப்னு ஹம்துன் (ஃபக்ருத்தீன்)  இவருடைய எழுத்தை "இடிந்த தேசத்திலிருந்து ஓர் இடிமுழக்கம்" 
கொஞ்சம் கீழே படித்து விட்டு  “எழுத்தோவியங்கள்” இங்கே
சொல்லுங்கள்.


இடிந்த தேசத்திலிருந்து ஓர் இடிமுழக்கம்

"என் தேசத்தை; அதன் மீதான ஆக்ரமிப்பை; அது குற்றப்
பின்னணி உடையவர்களாலும் யுத்த வெறியர்களாலும்
ஆளப்படும் அவலத்தை; அமெரிக்காவின் அப்பட்டமான சுயநல
வெறியை; சுரண்டலை வெளிஉலகுக்குத் தெரிவிக்க அனைத்து உபாயங்களையும் நிச்சயம் மேற்கொள்வேன்" என்கிறார் அந்தப்
பெண். உலகின் மிக தைரியமான பெண் என்றும் பாராட்டப்-
படுகிறார் அவர்.

உலகின் சக்தி வாய்ந்த 100 பேரில் ஒருவராக, கடந்த மே மாதம்
டைம் பத்திரிக்கை தேர்ந்தெடுத்திருந்தவர்களுள் அவரும் ஒருவர்.
அவர் பெயர் மலலாய் ஜோயா. ஆஃப்கனிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். "எனது நாடு, அதன் முன்னேற்றம்
குறித்து பெரும் கனவுகளைச் சுமந்தலைகிறேன்" என்கிறார்.

லோயா ஜிர்கா எனப்படும் ஆப்கன் மக்களவைக்கு 2007 ஆம்
ஆண்டு, தன்னுடைய 28 வயதில் தேர்தல் வெற்றி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் மிக இளவயது நாடாளுமன்ற
உறுப்பினர் (MP) ஆக இருந்த ஜோயாவை, அவருடைய மூன்று
நிமிட உரையை எதிர்கொள்ள முடியாத ஆஃப்கன் நாடாளுமன்றம் பதவிபறிப்பு செய்து அவரை வீட்டுக்கு அனுப்பியது. ஆனால்
ஜோயாவின் பயணம் அதிலிருந்து தான் தொடங்கிற்று எனலாம்.

பன்மைச் சமுதாயங்களும் மனித உரிமைகளும் என்கிற
தலைப்பில் நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கில் கலந்து
கொள்ள கனடாவின் மாண்ட்ரியல் நகரிலுள்ள மெக்கில் பல்கலைக்கழகத்திற்கு கடந்த செப்டம்பரில் ஜோயா வந்திருந்தார். உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சட்ட
நிபுணர்கள், அரச தந்திரிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என்று உயர்நிலையில் உள்ள பலரும் கலந்துகொண்ட கருத்தரங்கு அது.

மாண்ட்ரியல் கருத்தரங்கில் இவருடைய உரையைக் கேட்ட
ஒட்டாவா பல்கலை பேராசிரியர் டெனிஸ் ரான்கோர்ட் இப்படி
எழுதுகிறார்: "இவருடைய உரை ஒரு கூரிய ஆயுதமாகச்
செயற்பட்டு, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நேச நாடுகளின்
போர்ப்பிரச்சார கடின வலையை சுக்குநூறாகக் கிழித்தெறிந்து
விட்டது. நம்முடைய எம்.பிக்கள் இவரிடம் பாடம் படிக்க
வேண்டும்"

ஒபாமா சமாதானத்துக்கான நோபல் பரிசு வாங்கிய சமயம்,
ஜோயாவை முன்னிறுத்தி பிரபல மனித உரிமை ஆர்வலர்
நோம் ச்சோம்ஸ்கி இப்படி குறிப்பிட்டார்: "நோபல் கமிட்டிக்கு
என்ன நேர்ந்துவிட்டது, ஜோயா போன்ற எளிய வாய்ப்புகள்
இருந்தும் கூட ...."

"எங்கள் விடுதலை வேட்கை நூறாண்டுகளைக் கடந்தது.
கண்ணியமும் நீதமும் நிரம்பியது. ஆனால் அது மிக நீண்ட
தொரு பெரும் போராட்டம். சிறுதுளிகள் சேர்ந்தே பெரு
வெள்ளமாகும் என்பதை அறிந்தே வைத்திருக்கிறேன். எங்கள்
மக்கள் மட்டும் நீதிக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் ஒன்று
பட்டு விடுவார்களேயானால் அது காட்டாற்று வெள்ளமாகிவிடும். யாராலும் தடுத்துநிறுத்த முடியாது" என்கிறார் ஜோயா.

"சிறுசிறு இனவாதப் பிரச்னைகளாலும், குழுச்சண்டைகளாலும்
சிதறுண்டுப் போகாமல், நாட்டு நலன் நாடி பொது எதிரிக்கு
எதிராக ஆஃப்கனியர் ஒன்று திரளவேண்டும்"

"தாலிபன்களையும், அல்-காய்தாவையும் காரணம் காட்டி
அமெரிக்கா சுரண்டலை மேற்கொள்கிறது. உண்மையில் தீவிரவாதத்திற்கெதிரான போர், தீவிரவாத வளர்ச்சிக்கே
வித்திட்டது" என்கிறார் ஜோயா.
உள்நாட்டில் பலத்த ஆதரவையும் அரசியல் எதிர்ப்பையும்
கணிசமான அளவு சம்பாதித்து வைத்திருக்கும் ஜோயா,
ஒரு சமயம் முஜாஹிதீன்களைப் பற்றி குறிப்பிட்டதும்
சர்ச்சையை உண்டாக்கியது: "இரண்டு விதமான முஜாஹிதீன்கள் இருக்கிறார்கள். ஒரு தரப்பினர் நாட்டு விடுதலை என்கிற
இலக்கு நோக்கி மனப்பூர்வமாகப் பாடுபட்டனர். அவர்களை
மதிக்கிறேன். ஆனால் மற்றொரு தரப்பினர் பதவிச் சண்டைக்காக
சொந்த நாட்டின் 60,000 மக்களை கொன்று குவித்தவர்கள்......".
உடனடியாக கம்யூனிஸ்ட் முத்திரை இவர்மீது குத்தப்பட்டது.
இவருடைய தந்தையோ முஜாஹிதீன்களுடன் சேர்ந்து
சோவியத் ரஷ்யாவின் ஆக்ரமிப்பை எதிர்த்துப் போரிட்டு
ஒரு காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"மெளனம் ஒருபோதும் வாய்ப்பாகாது" என்கிற ஜோயாவிடம்
"பன்னாட்டுச் சமூகத்திடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?"
என்று கேட்கப்பட்டபோது "நீங்கள் (பன்னாட்டு அரசுகள், சமூகம், அமைப்புகள்) எங்களுக்குச் செய்ய முடிகிற மிகப் பெரிய உதவி, அமெரிக்காவின் பின்னால் போகாமல் இருப்பதுதான்"

"நேட்டோ படைகளுடன் சேர உங்கள் நாட்டுப் படைகளை
அனுப்பாதீர்கள்" என்று உடனடியாக விடையிறுக்கிறார். ஸ்வீடன்
முதலான நாடுகளுக்கு இதே கருத்தை வலியுறுத்தி சுற்றுப்-
பயணமும் ஜோயா மேற்கொண்டிருந்தார்.

நான்கு முறைக்கும் மேல் தன் மீது நடத்தப்பட்ட மரணத்
தாக்குதல் களிலிருந்து தப்பியிருக்கும் ஜோயா, பல நாடுகளுக்கும்
பயணம் செய்திருக்கிறார். "உங்கள் பயணத்தில் நீங்கள் கண்டது
என்ன?" என்று கேட்டால், "மக்களுக்கும் அரசுகளுக்கும் இடையே
இருக்கும் தூரம்தான், அது கடக்க இயலாததாக மாறிவருகிறது"
என்று பதிலளிக்கிறார். ஜாமியா மில்லியா பல்கலைகழகத்தின்
கருத்தரங்கு ஒன்றிற்காக ஜோயா இந்தியாவுக்கும் வந்திருக்கிறார்.

இப்னு ஹம்துன் (பஃக்ருத்தீன்) சவூதி

நன்றி : இந்நேரம்


**********************************************************************************

  ASHROFF SHIHABDEEN
 
இவ்வருடம் மலேசியாவில் நடை பெறவுள்ளதாக அறிவிக்கப்-
பட்டிருக்கும் 'உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்கான தகவல்களை' இங்கே சென்று படியுங்கள்.

"நாட்டவிழி நெய்தல்"



வியாழன், பிப்ரவரி 17, 2011

சக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்!! (டயாபடீஸ்)

சென்ற பதிவில் (ஆசையில்லா மனிதர்கள்) சஹர் பக்கிர்
பாவாவின் மகனார், தற்சமயம் வாடகை ஆட்டோ ஒட்டி அன்றாட
பிழைப்பு நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ
வாங்கிக் கொடுப்பதாக, நகையை தொலைத்து திரும்ப பெற்றுக்
கொண்ட நமது சொந்தக்காரர்கள் மகிழ்ச்சியோடு இன்று
தெரிவித்தார்கள். அவர்கள் இருவருக்கும் நமது வாழ்த்துகளை சொல்லுவோம்!!!
**************************************************************************************
கக்கு மாணிக்கம் அண்ணன் எல்லோருக்கும் டாக்டர் பட்டம் கொடுத்தாலும் கொடுத்தார். அவரர்கள் ஒரிஜினல் டாக்டர்
ரேஞ்சுக்கு மருத்துவப் பதிவெல்லாம் எழுத ஆரம்பித்து
விட்டார்கள். நமக்கும் தானே அவர் டாக்டர் பட்டம் கொடுத்தார்.
நாமும் மருத்துவத்தைப் பற்றி எழுதலாம் என்று இங்கே ஒரு
பதிவை போடுகிறேன். டாக்டர்கள் வாழ்க!! ஹி..ஹி.. (நான் என்னை சொல்லிக் கொண்டேன்.)
                                                                                                                             

சக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்!! (டயாபடீஸ்)

சக்கரை வியாதி என்பது ஒரு கொடிய நோய் அல்ல. வாயைக்
கட்டி பேணினால் எல்லா நோயும் ஒரு அடி எட்டி நின்று
வேடிக்கைப் பார்த்து விட்டு எட்ட ஓடிப் போய் விடும்.

சரி இந்த சக்கரை நோய் எப்படி வருகிறது?

சாதரணமாக bp உள்ளவர்களுக்கு மன அழுத்தம் கூடும்போது சத்தமில்லாமல் இந்த நோய் இவர்களுக்கு  இலவச இணைப்பாய்
ஒட்டிக் கொள்கிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும் பிரிஸ்கிரிப்ஷன்களை தவறாது பயன்படுத்தி,
சாதாரண நடையோ - வேக நடையோ நடந்து உடலை
கண்ட்ரோலில் வைத்துக் கொண்டாலே போதுமானது. அதை
விடுத்து bp வந்து விட்டதே என்று கவலைப்பட்டு, இன்னும்
பல கவலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டால் கேட்கவே
வேண்டாம். சர்வசாதரணமாக இந்த சுகர் நோய் அளவைக்
கடந்து விடும்.

ஆகவே எந்த கவலைகளும் இல்லாமல் மன சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தாலே பாதி நோயை நம்மை அண்ட
விடாமல், மற்றவை உண்ணும் உணவிலும், வாழும் பழக்க வழக்கங்களிலும் மனிதர்கள் திருப்திகரமாக வாழ்ந்து விடலாம். சுகாதாரமாக வாழ்வதற்கு சுற்று புற சூழ்நிலையும் காரணிகளாக அமைகின்றன.

ஒன்றுமே புரியாமல் bp உள்ள மனிதர்கள் உண்டு தின்று வாழும்
போது, திடுதிப்பென்று சுகர் 240 - 350 வந்துவிட நிலைகுலைந்து போகிறார்கள். அதை சாப்பிட வேண்டாம் இதை சாப்பிட
வேண்டாம் எனும் போது மேலும் வெறுத்துப் போகிறார்கள்.

அதனால் நாம் எப்போதுமே வருடத்துக்கு ஒரு முறை மெடிக்கல்
செக் அப் செய்து வருவது தான் பாதுகாப்பான விஷயம். இங்கே
சவுதியில் பெரும்பாலான கம்பெனிகளில் மெடி-இன்சூரன்ஸ்
இருப்பதால் மூன்று மாததிற்கொருமுறை ஃபுல் செக்அப் செய்து
கொள்ள சொல்லி (இது உங்கள் காசல்லவே இன்சூரன்ஸ் தானே
தருகிறது என்று) டாக்டர்களே வற்புறுத்துகிறார்கள். அதுவும்
நல்லதுக்கு தானென்று நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சக்கரையை உடனடியாய் கண்ட்ரோலுக்கு கொண்டுவர நாம்
அன்றாடம் காய்கறிகளில் சேர்த்துக் கொள்ள பயன்படுத்தும் வெண்டைக்காய் மிகப் பெறும் பயனைத் தருகிறது.


இந்த நோய் இருப்பவர்கள் கொஞ்சம் வெண்டைக்காயை வாங்கி
ஸ்டாக் வைத்துக் கொள்வது நல்லது. தினம்  இரண்டே இரண்டு
வெண்டைகாயை தலையையும் வாலையும் வெட்டிவிட்டு, இரவில் படுக்கப் போகுமுன், மேலே படத்தில் உள்ளது போல் ஸ்லைஸ் ஸ்லைசாக வெட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு கிளாஸ்
தண்ணீரில் அவைகளை  போட்டு ஊறவைத்து மூடிவிடவும்.

காலையில் எழுந்தவுடன் அந்த ஊறவைத்த தண்ணீரை எடுத்து,
ஸ்லைஸ் வெண்டைக்காய்களையும், கொட்டைகள் உதிர்ந்து
கிடந்தால் அவைகளையும் ஒரு ஸ்பூனால் எடுத்துப் போட்டு
விட்டு, அந்த தண்ணீரை மட்டும் பல்விளக்கியபிறகு வெறும்
வயிற்றில் அப்படியே குடித்து விடவும். இது போல் தொடர்ந்து
செய்துவர சுகர் அளவு சட்டென்று குறைந்து, கண்ட்ரோலில்
இருக்கும். இதை எனது நண்பர் கடை பிடித்து வந்ததால் தெரிந்து
கொண்ட பலன். உங்களில் யாருக்கேனும் இஷ்டமானவர்களுக்கு
சுகர் கட்டுக்கடங்காமல் இருந்தால் நீங்களும் இதை பரிட்சித்துப்
பாருங்கள். பிறகு சுகர் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்.

இருங்க!! இன்னொரு குறிப்பையும் சொல்லிவிட்டு போகிறேன்
யாரும் அடிக்க வராதீங்க!!

இரவில் கண்விழித்து நெடுந்தூரம் காரோட்டி பயணிப்பவர்களுக்கு,
வழியில் தூக்கம் வருவதைப் போல் கண்கள் செருகினால்,
எங்காவது ஓரிடத்தில் காரை நிறுத்தி சிறிது நேரம் கண்ணுறங்கி
விட்டு செல்வார்கள் பார்த்திருக்கிறோம். அப்படியல்லாது விரைந்து பயணிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு யோசனை!!

சிறிது நீரை உள்ளங்கையில் ஊற்றி மூக்கால் உறிஞ்சினால், சுரீர்
என்று புறை ஏறுவது போல் ஏறி உடல் சுறுசுறுப்பாகிவிடும்.
அப்பொழுது பழையபடி நெடுந்தூரம் பயணத்தை மேற்கொள்ளலாம்.

நடிகவேல் ‘எம் ஆர் ராதா’ சொல்லக் கேட்டு - அவர் மகன் நடிகர் ‘ராதாரவி’ (திரும்பிப் பார்க்கிறேன் - ஜெயா டிவி)

வியாழன், பிப்ரவரி 10, 2011

ஆசையில்லா மனிதர்கள்!!




ஊரில் எங்க சொந்தகாரர்கள் வீட்டில் சுமார் 75 பவுன் (சவரன்)
பெறுமான நகையை தொலச்சுட்டாங்கலாம். கிட்டத்தட்ட 10-11
லட்சம் பெறுமானது. மனசுக்கு கலக்கமா இருந்தது. ஒரு வருஷம்
ரெண்டு வருஷம் சம்பாதித்த பணமா?? பல வருஷம் கஷ்டப்பட்டு சம்பாதித்த தாச்சே!! சங்கடப் படுவார்களே! உடனே ஊருக்கு
போனில் பேசி ஆறுதல் சொன்னேன்.

கண் கட்டப்பட்டது போல் சில சம்பவங்கள் இது போல் மறைக்கப்
படும். ஆனால் அது நிச்சயம் திரும்ப கிடைத்துவிடும். என்
அனுபவத்தில் அது மாதிரி நிகழ்ந்திருக்கு!!. அதை அவர்களுக்குச் சொன்னேன். நிச்சயம் கிடைக்கும் என்று நாம் என்ன தான் ஆறுதல் சொன்னாலும் இழந்தவர்களுக்கு மனம் கேட்குமா? அழுதார்கள்!!

சரி எப்படி எந்த சூழ்நிலையில் அவைகள் தொலைந்தது. அதை நாம் அவசியம் தெரிந்து கொள்ளனும்.

ஏதோ கல்யாண விஷேசத்திற்காக குடும்பத்தில் உள்ள பெண்கள் புறப்பட்டு போயிருக்கிறார்கள். போகிற வழியில் ஒரு மரண செய்தி கேட்டு, அந்த வழியில் தானே போகிறோம் அப்படியே அந்த
வீட்டுக்குள் நுழைந்து விட்டுச் செல்லலாம் என்ற யோசனையிலும், நகைகளை அணிந்துச் சென்றால் அவ்வளவு உசிதமா இருக்காதே
என்று நினைத்து, எல்லாவற்றையும் கழற்றி ஒரு ஹாண்ட் பேகில் வைத்து காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த பிள்ளைகளிடம்
கவனமாய் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார்கள்.

அரை மணி நேரம் தான் சென்றிருக்கும், திரும்ப வந்து காரில் ஏறி கல்யாண வீட்டிற்கு புறப்பட்டு போய் அங்கே நகை பேக்கை
தேடியபோது கிடைக்கவில்லை. எப்படி இருக்கும் மனசு!! பிள்ளை
களிடம் கேட்டபோது விவரம் சொல்லத் தெரியவில்லை!!

“அழுகிறார்களே தவிர வேறு எதையும் சொல்ல மாட்டேங்கிறார்கள்” கல்யாண வீடு கொஞ்ச நேரம் கலங்கிப் போனது என்னவோ நிஜம்...
என்று சொல்லுகிறார்கள் அங்குள்ளவர்கள்!!

காரை ரோட்டோரமாய் நிறுத்தி வைத்திருந்த போது குழந்தைகள்
கதவை திறந்து வைத்துக் கொண்டு விளையாடியிருக்கிறது.
“அப்பொழுது கவனமில்லாமல் வெளியே விழுந்திருக்கக் கூடும்”
என்று சொன்னார்கள்.

அது நல்லவர்கள் கையில் கிடைத்தாலே ஒழிய, வேறு எவர்
கையில் கிடைத்தாலும் திரும்ப கிடைக்கப் போவதில்லை.
இது நிஜம். மனதில் நினைத்துக் கொண்டேன்.

உரியவர்களுக்கு தகவல் தெரியப் படுத்தியவுடன் ஆளாளுக்கு
வந்து அவரவர்கள் ரீதியில் தொலைத்த இடம், போலீஸ்
ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட், வெளியூரில் இருப்பவர்களுக்கு
செய்தி - என்று பின்னிரவு வரை நீண்டிருக்கிறது.

நம்மூர் போலீஸ் டிபார்ட்மென்டில் நகைகள் திருட்டுப்
போயிருந்தால் எப்படியாவது கண்டு பிடித்து விடுவார்கள்.
ஆனால் இந்த மாதிரி ரோட்டில் தொலைத்து விட்டோம்
என்று சொன்னால், லேசில் பிடி கிடைக்காதே!!

அந்த பெண்களின் தம்பியில் ஒருவர் கார் நின்ற வீட்டிற்கு
அருகிலேயே திண்ணையில் இரவு முழுதும் உட்கார்ந்து
எடுத்தவர்கள் யாரும் அங்கே இங்கே இருந்தால் செய்திகள்
தெரிய வருமே என்று உட்கார்ந்திருக்கிறார். ஊஹூம்... ஒன்றும் வேலைக்காக வில்லை !! தூக்கம் கண்களைச் சுழற்ற வீட்டில்
போய் படுத்து விட்டார்.

(விடியலுக்கு முன்) ஃபஜர் நேரத் தொழுகைக்குப் பின் - "உங்க
வீட்டில் நகைகள் காணாமப் போனதாக பேசிக் கொண்டார்களே
அது எங்கள் வீட்டில் தான் இருக்கிறது. வாருங்கள் - வந்து சரி
பார்த்து எடுத்துச் செல்லுங்கள்" என்று இவருக்கு தெரிந்த நபர்
செல்பேசி, இவரை விழிப்புற செய்திருக்கிறார். ஹா.. தூக்கமாவது ஒன்னாவது... இவர் அங்கே விரைந்திருக்கிறார்.

யார் அவர்???

நோன்பு (ரமலான்) காலங்களில் பின்னிரவு (சஹர்) நேர உணவை
உண்ண, அந்த ஊரையே ‘கொட்டடித்து’ விழிப்புற செய்யும் “சஹர்
பக்கிர் பாவா” வுடைய மகன் தான் அவர் என்று சொன்னால்
உங்களால் நம்ப முடிகிறதா? என்னாலும் தான் நம்ப முடிய
வில்லை...!! (இவர்களுக்கு என்று ஒரு தனி காலனி கட்டிக்
கொடுத்து அமர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை பங்கிட்டு
கொள்கிறது அந்த ஊர் நிர்வாக சபை என்பது வேறு விஷயம்)

அந்த நேர்மையான மனிதர் இவரிடம் சொன்னது, "நான் எப்போதும்
ஃபஜர் (விடியல்) தொழுகைக்கு செல்லும் போது செருப்பு அணியும் இடத்தில் இந்த பேக் இருந்தது. பிள்ளை களுடைய ஸ்கூல் பேக்
அல்லது விளையாட்டுப் பொருட்கள் போட்டு வைத்திருக்கும் பேக்
என்றே தான் நினைத்து சென்று விட்டேன். விடி லைட்டில்
சரியாகவும் தெரியவில்லை. தொழுது விட்டு வீடு திரும்பியவுடன்
தான் கவனித்தேன் முற்றிலுமாக நம் வீட்டுக்கே அது சம்பந்த
மில்லாத ஒரு பொருள், எனவே அதை திறந்து பார்த்தப் போது
முழுதுமாக நகை இருந்தது.

அதனுள்ளே தேடியபோது தான் ஒரு சின்ன டைரியில் உங்கள்
செல்பேசி நம்பர் முதல் வீட்டு அட்ரஸ் வரை எழுதி இருந்தது
கண்டு உங்களுக்கு பேசினேன். சரி பார்த்து எடுத்துச் செல்லுங்கள்" என்றிருக்கிறார்.

சரியாவது ஒன்னாவது?? பலமுறை நன்றி சொல்லிவிட்டு
வந்திருக்கிறார்!!

பிறகு தான் எனக்கு தகவல் தெரிவித்தார்கள்.

“நிச்சயமாய் இவர்கள் மிக மிக நல்லவர்கள். ஆனால் இறைவன் இவர்களை இன்னும் மிகவும் பின்தங்கிய அன்றாடம் காய்ச்சி
நிலையில் வைத்துள்ளான். நன்றியை வார்த்தையோடு
மட்டுமில்லாமல் இவர்களின் நல்ல பிழைப்புக்கு நம்மால் எந்த
அளவு அதிகப் பட்சமாக உதவி செய்ய முடியுமோ அதை
செய்யுங்கள்” என்று சொல்லி இருக்கிறேன்.

கண்ணுக்குத் தெரிந்த / தெரியாத மனிதர்களில் இவர்களைப்
போல் எவ்வளவோ நல்ல மனம் படைத்த இதயங்கள் இவ்வுலகில் இன்னும் நிறையபேர் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள்!!

எனினும், இச்சம்பவத்தில் சில பாடங்கள் கிட்டின. 

(1) விலையுயர்ந்த பொருட்களை, குழந்தைகள் பாதுகாப்பில்
ஒருபோதும் விடக்கூடாது.

(2) பிள்ளைகளைத் தனியாகவும் விடக்கூடாது.

இச் சம்பவம் சொல்லும் நீதி!!

(1 ) ஹலாலான (நேர்மையான)   முறையில் சேமித்த பொருள்
எப்போதும் நம்மை விட்டுப் போகாது.

( 2 ) உலகத்தில நல்லவர்கள் இன்னும் வாழத்தான் செய்கிறார்கள்.

( 3) அப்படி வாழ்பவர்கள் பெரும்பாலும் ஏழைகள் தான். ஆனால்
நாம அவர்களிடம் நெருங்கி பழகுவதில்லை.

( 4 ) காரணம் நம்மை மற்றவர்கள் சில்லைரைத்தனமாக நினைத்து விடுவார்களோ இல்லை அவர்கள் கடன் ஏதும் கேட்டு விடுவார்- களோன்னு பயம்.

( 5 ) இது போல சில பொருட்கள் நம்மை விட்டு (கொஞ்ச நேரம்) விலகினால்தான் இறைவனின் நினைவும், நல்லவர்களை பற்றியும்
நாம நினைக்கிறோம்..

எல்லாம் நன்மைக்கே...!! எல்லா புகழும் இறைவனுக்கே!!!





ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

சற்றே தாமதமாய் வருவேன்!!





Jaleela Kamal கூறியது...


// சாப்பாடு பாட்ட கேட்டு உண்ட மயக்கமா காதர் காக்காவுக்கு..//


அது வேறு ஒன்றுமில்லை வீட்டில் 'நெட்' 'வொர்க்' ஆகல!
ஆபீசில் கொஞ்சம் ஆணி அதிகம். அது தான் இத்தனை
தாமதம். ஆஹா பக்கங்கள் வாசக  மக்கள்ஸ் தாமதத்திற்கு
சற்றே பொருத்தருள்க!! இன்னும் இரண்டொரு நாளில்
சரியாகி விடும்

அன்புடன்

எம் அப்துல் காதர்