facebook

ஞாயிறு, ஜூன் 27, 2010

எங்களின் நேசமிக்கப் பாட்டி

                   
 
 





கோவையில் பரபரப்பாக, செழுசெழுப்பாக இனிதே  நடந்து முடிந்தது செம்மொழி  மாநாடு. எல்லோரும் தமிழ் பேசி, தமிழ் பாடி, தமிழிலேயே கையெழுத்தும் போட்டு அப்பப்பா. தாங்க முடியலைய்யா. ஐரோப்பிய, மற்றும் ஆசியா தேசங்களிலிருந்து வந்து, வித விதமா?? தமிழ் பேசியவர்களின் தமிழ்?? கேட்க கேட்க நெஞ்சு மட்டுமல்ல எல்லாமே குளிர்ந்து போச்சுங்க. செலவு எவ்வளவோ கோடிகளில் சொல்கிறார்கள் ஏதோ தெருக் கோடி மாதிரி. இருக்கிறவர்கள் செலவு செய்கிறார்கள். நம்முடைய கடன், மன உளைச்சல், நோய் நொடி, சண்டை பிணக்கு எல்லாமே தீர்ந்து போச்சுங்க. எப்படி எப்படி எல்லாமோ தமிழ் பேச வைக்க பாடு படுகிறோம் பாருங்கள். இப்ப மேலே படித்ததையெல்லாம் உங்கள் கைக்கொண்டு அழித்து விட்டு, சட்டென்று அடுத்தப் பாராவுக்குள் போய் விடுவோம் வாங்க!

என்னுடைய பாட்டி இருக்கே அது பேசாத தமிழா. நான் இந்த தடவை ஊர் போயிருக்கும் போது வீட்டுக்கு யாரோ விருந்தினர்கள் வந்திருக்குபோது, எல்லாரையும் விழுந்து விழுந்து உபசரித்து தேநீர் முதல் ஜூஸ் வரை தானே கைப்பட செய்து கொடுத்தது.

வந்திருந்தவர்களில் யாரோ வடை பஜ்ஜி எல்லாம் சாப்பிடவில்லை என்றதும் ஃபிப்டி ஃபிப்டி பிஸ்கட் வாங்க விட்டு, அதை அவங்க கிட்ட போய் உட்கார்ந்து பரிவாய் பிரித்து வைத்து, சாப்பிடும்மா "அம்பதுக்கு அம்பது" பிஸ்கட்மா (ஃபிப்டி ஃபிப்டிக்கு தமிழ்ங்க) நல்லா இருக்கும் சாப்பிடும்மா என்று தேனொழுக பேசி எல்லாத்தையும் சாப்பிட வைத்து தான் அனுப்பி வைத்தது.

எல்லோரும் புறப்பட்டு போனபின் பாட்டியை கிட்ட கூப்பிட்டு உச்சி மோந்து, எப்படி பாட்டி இப்படியெல்லாம் பேசுற என்றால், "அடப் போடா இவனே", என்று வெக்கப் பட்டு என் தலைமுடியை கோதி விடும்.(அன்புங்க அன்பு) எங்களை அவ்வளவு அருமைப் பெருமையாய் வைத்திருந்த பாட்டி எப்படியெல்லாமோ எங்களோடு இழையோடிய பாட்டி, நான் இங்கு வந்த பின்பு, சென்ற மாதம் இறந்து போய்டுச்சுங்க...
                                           


நான் பேச்சிலர்ஸ் பில்டிங்கில் தங்கி இருந்த காலம் சொர்க்கமான சொர்க்கம். அப்ப எங்களோடு ஒரு கேரளா நண்பரும் தங்கி இருந்தார். அவர் பெயர் வேண்டாம். கேரள நண்பர்கள் நம்மை எப்போதுமே “வா-போ” (இங்கேயும் அன்பு அன்பு) என்று தான் ஒருமையில் அழைப்பார்கள். அது அவர்களின் இயல்பு தான் என்றாலும் பிறர் நம்மை பார்க்க ரூமிற்கு வரும்போது அது உறுத்தலாவே இருக்கும். நான் பல முறை சொல்லிப் பார்த்துட்டேங்க. கேட்கிறானில்ல. இதற்கு என்ன செய்யலாம் என்று நிறைய நேரம் யோசித்திருக்கிறேன்.(நாமெல்லாம் அப்படி யோசிக்கிற ஆட்கள் தானே!ஒரு வழியும் புலப்பட்டதில்லை) ஹி..ஹி..

ரெண்டு ரூமில் உள்ள, நான்கு பேரும், ஆளுக்கு ஒரு நாள் என்று முறை வைத்து சமைப்பதாக எழுதாத உடன் படிக்கை. நல்லா சமைப்போம்ங்க. அந்த நாள் என்னுடைய முறை. சோறாக்கி, ரசம் வைத்து, மீன் பொரிக்கணும், எம்புட்டு வேலை பாருங்க...

ஒத்தையா நின்னு எவ்வளவு சமாளிப்பு. வேத்து விறுவிறுத்து செஞ்சு முடிசிடுவேங்க. எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து தான், கார்பெட்டில் பேப்பர் விரித்து கலமுலான்னு பேசிக்கிட்டு தான் சாப்பிடுவோம். அப்படி சாப்பிட்டா தான் சோறே இறங்கும். அப்படி ஒரு பக்குவமாய் இங்கே இருக்கப் பழகி விட்டோம்.

முதலில் பேப்பரை விரித்து, குடிக்க தண்ணி வைத்து, சோற்று சட்டியை கொண்டு வந்து வைத்து, பொறித்த மீனையும், ஊறுகாவையும் கொண்டு வந்து வைத்து விட்டு எல்லாரும் வந்து உட்கார்ந்தாச்சுங்க. உட்கார்ந்த பின் தான் தெரித்தது ரசத்தை எடுத்து வர மறந்துட்டேங்க.

அதன்பின் அவசர அவசரமாய் எழுந்து போய் எடுத்து வந்து வைக்கிற நேரத்தில் கை தவறி கேரளா நண்பர் உட்கார்ந்திருந்த முதுகுப் பக்கம் சட்டியோடு சரேலென்று விழ, "என்ன காதர் இப்படி பண்ணிட்டீங்க" என்றாரே பார்க்கலாம். இது எதார்த்தமா தான் நடந்ததுங்க. நம்புங்க.

எங்கிருந்து வந்தது மவனே இந்த மரியாதைத் தமிழ். எல்லாம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் நடக்க வேண்டியது தன்னால நடக்கும் போல. இப்பல்லாம் அவர் எல்லாரையும் “வாங்க போங்க” என்றுதான் அழைக்கிறார். அதைவிடவும் ஒரு படி மேலே போய் பிளாட்களில் சும்மா சுற்றித் திரியும் கிடைத்ததை தின்னும் பூனைகளைக் கூட, “பூனை வர்றார், பூனை போறார்” என்று தான் சொல்வார் என்றால் சிரிப்பீங்களே! சிரிக்காதீங்க..

நாங்க தான் அவர் மேல் இரக்கப்பட்டு,  பூனைக்கெல்லாம்
அவ்வளவு மரியாதை வேண்டாம் என்போம். இருந்தாலும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. இப்பல்லாம் அவர் "பூனை வர்ரான், பூனை போறான், பூனை சாப்பிடுறான்" என்று தான் சொல்கிறார். இப்படியாக ஜாலியாப் போனது அந்த காலக் கட்டங்கள்.

செலவே இல்லாம இப்படி எத்தனை பேருக்கு நாங்க தமிழ் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். கவர்மெண்ட் இப்படி எல்லாம் யோசிக்கதாங்க..!

                                                        

திங்கள், ஜூன் 21, 2010

செ.சரவணக்குமார் இப்படி செய்யலாமா..?


அது வேறொண்ணுமில்லீங்க. செ.சரவணக்குமார்  எங்களைப் பற்றி புதிய பதிவர்கள் அறிமுகத்தில் எல்லோரிடமும்  பகிர்ந்துக் கொண்டார். எங்களைப் பற்றி அவர் இவ்வாறாக எழுதியதும்  மிகுந்த மகிழ்ச்சியாகி, அதை உங்களோடு...


இனி சரவணக்குமார்-
****************************************************************
நீங்கள் ஒரு வங்கியிலோ அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்திலோ தொடர் வாடிக்கையாளராக இருக்கிறீர்கள். அங்கு பணிபுரியும் அனைவரையுமே உங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்கு நாம் எண்ணற்ற வாடிக்கையாளர்களில் ஒருவர் என்ற அளவிலேயே பரிச்சயம் ஆகியிருப்போம். அப்படித் தொடர்ச்சியாகச் சென்று கொண்டிருக்கும் நிறுவனங்களில் சிலரின் ஆளுமைகள் நம்மை வெகுவாக ஈர்க்கும்.  அவர்களின் செயல்பாடுகள் வாடிக்கையாளரோடு பழகும் முறை என வெகு சிலரே நம் மனதிற்கு மிக நெருக்கமாக வருவார்கள். அடுத்த முறை செல்லும்போது அவர் எங்கே எனத் தேடும் அளவிற்கு இருக்கும் அவர்கள் மீதான நம் விருப்பம். எதிர்பாராதவிதமாக நாம் விரும்பும் அந்த ஆளுமைகள் நமக்கு மிக நெருக்கமான நண்பர்களாகிவிட்டால் எத்தனை தூரம் மனம் மகிழ்ச்சியில் துள்ளும் என்பதை கடந்த வாரம் உணர்ந்தேன்.

நான் எப்போதுமே AL ZAMIL BANKING & SPEED MONEY REMITTANCE SERVICE-ல் தான் ஊருக்குப் பணம் அனுப்புவேன். தம்மாம், அல்கோபர், ஜுபைல், ரியாத் என சவுதியில் மொத்தமே நான்கு இடங்களில்தான் இந்த எக்சேன்ஞ் செயல்படுகிறது. தமாமிலிருக்கும் அல் ஜாமில்
கிளைக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் இதன் வாடிக்கையாளர் செயல்பாடுகளையும் ஊழியர்களின் அன்பான சேவையையும் பார்த்து வியந்திருக்கிறேன். எனது கடந்த சில இடுகைகளில் பின்னூட்டங்கள் வாயிலாக நண்பர் திரு. எம் அப்துல்காதர் அவர்களும், திரு.இளம் தூயவன் அவர்களும், அறிமுகமாகியிருந்தனர். எம் அப்துல்காதர் தமாமில் இருப்பதாக சொல்லி அவரது அலைபேசி எண்ணை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். தொடர்புகொண்டபோது அவர்கள் இருவருமே அல்ஜமீலில் பணியாற்றுவதாக சொன்னார். மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். கடந்த வெள்ளியன்று பதிவர் நண்பர் ஆறுமுகம் முருகேசனோடு சென்று அவர்களைச் சந்தித்தேன். இன்ப அதிர்ச்சியான சந்திப்பு அது.

இரண்டு வருடங்களுக்கு மேலாக நன்கு பரிச்சயமாகியிருக்கும் இருவர் பதிவுகளின் வாயிலாக நண்பர்கள் ஆனது மிகப் பெரிய சந்தோஷம். இருவருமே புதிதாக எழுத ஆரம்பித்துள்ளனர். அவர்களோடு பேசிக்கொண்டிருந்தது கொஞ்ச நேரமேயானாலும் மிக மகிழ்ச்சியான சந்திப்பாக அமைந்தது அது. நெகிழ்ச்சியான இந்தத் தருணம் பற்றி பா.ரா அண்ணனிடம் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். பதிவுகளின் மூலம் கிடைக்கும் நட்புக்கள் உற்சாகமளிப்பதாக இருக்கின்றன.
=======================================================
நிச்சயமாய் இது எங்களுக்கு புதிய அனுபவம். கடந்த சில மாதங்களாகத் தான் வலைகளில் உலவிக் கொண்டும், கருத்துரைகள் எழுதிக் கொண்டுமிருந்த எங்களை மிகுந்த உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டி எங்களை ஆகர்ஷித்துக் கொண்டார்.

இன்றுடன் ஆரம்பித்து 22 நாட்கள் தானாகிறது. பார்த்து விட்டு, படித்து விட்டு எல்லோரும் விசாரிக்கிறார்கள். சூப்பர் என்று சிங்கபூரிலிருந்தும், ஸ்க்ரோல் ஆகிட்டே இருக்கு என்று சரிபண்ணுங்க என்று ஷார்ஜாவி- லிருந்தும், ஊக்கம் தந்தும் உற்சாகமூட்டியும், அபுதாபி  துபாய் கத்தார் இந்தியா மலேசியா என்று  இன்னும் எல்லா  தூர தேசங்களில் இருந்தும் எழுதுகிறார்கள். கடுமையான உழைப்புக்கு நடுவிலும் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது!
--------------------------------------------------------------------------------------------
"செ.சரவணக்குமார் இப்படி செய்யலாமா..?"  என்று, அவர் எழுதிய இடுகையை  எடுத்துப் போட்டது சரியா? தப்பா? அதை அவர்தானே சொல்லணும் அதனால்
say சரவணக்குமார் say yes or no..?
---------------------------------------------------------------------------------------------
செ.சரவணக்குமார் பக்கங்களை கிளிக்கி படியுங்கள்.

சனி, ஜூன் 19, 2010

அம்மா என்னும் தாய்மை

                              
                           
                                                                        தந்தையர்கள் தினம்

எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு கைஅழுத்தத்தில்
எல்லாமே உணர்த்துவார் அப்பா...

முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன என்னைப் பற்றி பெருமையாக அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது...

உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என...

கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..?

சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில
சொல்லிக்கொடுத்த அப்பா என் கரம் பிடித்து
நடந்த போது என்ன நினைத்திருப்பார்..?

லேசாக என் கால் தடுமாறினாலும் பதறும் அப்பா
இன்று நான் தடுமாறிய போது பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்..

அம்மா செல்லமா அப்பா செல்லமா என கேட்டபோதெல்லாம் பெருமையாகச் சொல்லி இருக்கிறேன் அம்மா செல்லமென அப்பா செல்லம் என, இன்று அப்பா சென்ற பின்னர் நான் யார் செல்லம்..?

எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும் அப்பாவை போல் யார் இருக்க முடியும்..?

சொல்லிக் கொடுத்ததில்லை, திட்டியதும் இல்லை,
இல்லை என்றும் சொன்னதுமில்லை, வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை, இருந்தும் ஏதோ ஒன்றினால்
கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு.

நானும் காட்டியதில்லை அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை... இருந்தும் காட்டிக் கொடுத்த கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை..

அம்மாவிடம் பாசத்தையும்
     அப்பாவிடம் நேசத்தையும்
          இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள் இல்லாமலும் போகலாம்...

வெறும் காமமும், கோபமும், வெறுப்பும், சண்டையும்,
பகையும், ஆட்டமும், பாட்டமும், திமிரும்,
அகந்தையுமா வாழ்க்கை?               
அன்பை தருவதும் பெறுவதும் தான் அது...

                                                         
* யாரோ எழுதிய கவிதை all credit goes to him, service charges  deteced 10% only...

செவ்வாய், ஜூன் 15, 2010

நட்புப் பக்கங்கள்


ஜெகத் எனும் நட்பு !
   



 நம்ம  ஃபிரிக்வென்சியோடு ஒத்துப்போகிற உண்மையான நண்பர்கள் ஒரு சிலரே நமக்கு அமைவர். அவர்களை நாம் நம் உள்ளங்கையில் வைத்துக் கொண்டாடனும்.
                   
               அவர்களில் மேற்படி.... ஜெகத்தும் ஒருவர்.

     நான் அல்கோபரில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம், MIDDLE EAST AIR LINES (MEA)  (இ)(வி)ல் அவர் இருந்தார். ரொம்ப சகஜமான பேர்வழி. நட்புக்களை கொண்டாடுவார். 'தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஏன் என்னை அழிக்கணும்' என்று பாரதியாரை நகைச்சுவையாய் வம்புக்கிழுப்பார்.

     பெங்களுரு HMT வாட்ச் கம்பெனியில்  வேலை பார்த்த இவரது மனைவி கூட ஐந்து வருட விடுமுறை எழுதிக் கொடுத்து விட்டு இவரோடு வந்து குடும்பம் நடத்திக்   கொண்டிருந்தது.

     அதிகாலையில் பூஜை அறையில் கிணு கிணு வென மணியடித்து சாமி கும்பிடும் மனைவியிடம், "ஏம்பா இப்படி காலையிலேயே தூங்குற சாமிய மணியடித்து எழுப்புறியே, ஒரு நா அந்த சாமி படத்துலேந்து இறங்கி வந்து அந்த மணியாலேயே ஒந் தலையில அடிக்கப் போகுது" என்பாராம். அவரோடு சமயங்களில் வரும் அவர் மனைவி என்னிடம் சொல்லி சிரிக்கும். ஏனென்றால் அந்நேரத்தில் இவர் தூங்கிக் கொண்டிருப்பாராம். ஒருவேளை சாமி என்று இவர் தன்னை தானே சொல்லிக் கொண்டாரோ? தெரியலை..

     இப்படியாக நமது காலங்கள் ஓடிக் கொண்டிருக்கிற வேகத்தில், அவர் என்னை வந்து பார்த்துப் போவது அரிதாகிப் போனது. ஏனென்று விசாரித்த போது, "கிட்னி ஸ்டார்டிங் டிரபுலாம்" என்று அவரே வந்து கமெண்ட்டும்  அடித்து விட்டு, என்னை திக்கித்து விட்டுப் போனார்.

    நாளாக நாளாக நூலாகிக் கொண்டிருந்தார். வாரத்திற்க்கொரு முறையோ, இரண்டு வாரம் கூடியோ டயாலிசிஸ் என்று சொல்லக் கூடிய ரத்த புத்துயிரூட்டளுக்கு சென்று வந்துக் கொண்டிருந்த போது கூட. "உள்ளங் காலில் குத்தி குத்தி உயிர் போகுதப்பா, கிட்னிய மாத்தனுமாம், செலவு ரொம்ப ஆகும் போல" என்று மருட்சி இல்லாமல் தெளிவாய் பேசினார்.

     கிட்னி மாற்று சிகிச்சைக்கு சென்னையில் ஒரு பிரபல ஹாஸ்பிடலில் (பெயர் வேண்டாமே!) அப்பாயின்மெண்ட் வாங்கி, ஒரு மாத ட்ரீட் மெண்டுக்குக்காகப் போனவர், பதினைந்து இருபது நாளிலேயே திரும்பி வந்து விட்டார். அன்று நான் ஆபீசில் வேளை விஷயமாய் யாருடனோ தொலைபேசிக் கொண்டிருந்த போது, சேரில் வந்து உட்கார்ந்த மனிதரை கண்டு ஒரு கணம் ஸ்தம்பித்து தான் போனேன். முகம் கை கால்களெல்லாம் சிகரெட் நெருப்பால் சுட்ட மாதிரி அட நம்ம ஜெகத் தான்.“என்ன சார் என்னாச்சு" பதைப் பதைத்துக் கேட்டேன்.

     "மூன்றரையிலிருந்து நாலு லட்சம் வரை செலவாச்சுப்பா. அது ஒரு பெரிய மேட்டர் கிடையாது. ரத்தத்தை ஒழுங்கா டெஸ்ட் பண்ணாமல் hiv aids உள்ள ரத்தத்தை எனக்கு ஏத்திட்டம்ப்பா. இன்னும் பத்தோ பதினைந்து நாளோ இருப்பேன் போல. இங்கு வந்த பின் கம்பெனியில் உடனே exit அடித்து விட்டார்கள்" என்று மூச்சு விடாமல் பேசினார் (இங்கே சவுதியில் அப்படி தான்.   இது மாதிரியாகிவிட்டால் govt இருக்கவும் விடாது என்பது எல்லோருக்கும் தெரிந்த கூடுதல் விஷயம்)

     அதன் பின் தான் அவரோடு வந்த அவர் மனைவியை பார்த்தேன். அழுத கண்கள் அழுதபடியே இருந்தது. எனக்காக pray பண்ணு என்று சொல்லி விட்டு போய் விட்டார். அவர் பத்து பதினைந்து நாள் என்று சொன்னது, தான் உயிரோடு இருப்பேன் என்பதை தானோ என்பது அவர் இறந்த செய்தி கிடைத்த பின் புரிந்தது.

     பின்னர் இவரது மனைவி HMT வேலையை ரிசைன் பண்ணிவிட்டு டிராவல் ஏஜென்சி ஒன்று தனியாய் துவங்கி தன்னுடைய இரண்டு மகன்களையும் நல்லவிதமாக படிக்க வைத்து துணிச்சலாய் வாழ்க்கையை எதிர் கொண்டது போற்றுதலுக்குரிய  விஷயம்.

                                         
விளம்பர சுவாரஸ்யங்கள்:

இந்த ஃபேன் படத்தை பார்க்கிறீர்களே அது சுற்றுகிறதா? சுற்றாவிட்டால், அதுக்காக நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்க. உங்க sys நல்லாதானிருக்கு. உங்க கண்டிஷன் எப்படி இருக்குன்னு சோதிக்கத் தான் அப்படி. புரிஞ்சீங்களா!


பஜாஜ் ஃபேன் விளம்பரம்

ஒரு ஆன்ட்டி அந்த ஃபேனை சுவிட்ச் ஆன் பண்ணுகிறார். அது ஆசிலேசனில் இங்கும் அங்கும் தலையாட்டி சுற்றுகிறது. அவர் முகத்தில் காற்றுபடும் போதெல்லாம் முகத்திலிருக்கும் சுருக்கங்கள் மறைந்து முகம் மிகுந்த பொலிவாகிறது. ஃபேனின் திசை மாறி நகரும் போது, திரும்பவும் முகம் பொலிவிழந்து போகிறது. திசை மாறி நகரும் காற்று அங்கே உட்கார்ந்திருக்கும் அங்கிள் முகத்திலும் படுகிறது. அவர் முகத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. பாவமாய் உட்கார்ந்திருக்கிறார். (நிச்சயமாய் அவர் தான் காசு கொடுத்து அந்த ஃபேனை வாங்கி வந்திருப்பார்.ஹும்..)

ஆமா இந்த விளம்பர கம்பெனிகளெல்லாம் ஆண்களை என்ன கேனையன்னு நெனசுட்டாங்களா. ங்கொய்யாலே.. அல்லது அவர்கள் ஃபேனில் இருந்து முகத்தினை பொலிவாக்கும் காற்றை வீசி அடிக்கிறார்களா? அப்ப முகத்தை அழகாக்கும் ஃபேஷன் மேக்கர், முகத்தை அழகாக்கும் சர்ஜரிகள் எல்லாம் இழுத்து மூடிட்டு போய்ட வேண்டியது தானா? என்னங்கடாது ஒண்ணுமே புரிய மாட்டேங்குது...

இந்த விளம்பர குரூ, விளம்பர ஹெட்..என்பவர்கள் மண்டையில் எல்லாம் என்ன மாதிரி ஒரு கற்பனை வளம்..

வெள்ளி, ஜூன் 11, 2010

விருந்தினர் பக்கங்கள்


விருந்தினர் பக்கங்கள் :


     நான் இங்கு வந்த பின்பு, நாங்களாகி போனது கடந்த ஆறு ஏழு வருடத்திற்கு முன்பு தான். தனியாக இருந்த காலத்தில் எப்படியும் பத்து பதினைந்து பிளாட் மாறியிருப்பேன். இவர்கள் எல்லாம் வந்த பின்பு மாறியிருப்பது இது ரெண்டாவது பிளாட்.

      சமீப காலமாய் இங்கு பாமிலி பிளாட் கிடைப்பது ரொம்ப சிரமமாயிருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் ரெண்ட் ரொம்ப தாஸ்தி. அந்த பிளாட் தேடி அலைந்த கதையை வேறு தனி இடுகையாய் எழுதுகிறேன்.

     பிளாட் தேட ஆரம்பித்ததுமே பால்கனி இல்லாத பிளாட் எதுவும் நமக்கு வேண்டாம் என்று வீட்டம்மா ஸ்ட்ரிட்டா சொல்லிட்டாங்க. ஆஹா அவங்க பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியுமா.(அதானே! எனக்கு நானே பயந்து கொண்டு, என்னை நானே இப்படி கேள்வியும் கேட்டுக்கொள்வேன்)

     இந்த பிளாட்டில் பால்கனி சுமாரான பெரிசு. கதவை திறந்தாலே வெளிக்காற்று சில்லென்று வரும். (வெயில் நேரத்தில் அல்ல) "ஹா" என்று திறந்த மாதிரி இருப்பதால் புறாக்கள் வந்து வந்து உட்கார்ந்து போவது தனி அழகாக சுவாரஸ்யமாக இருந்தது.

     அதுவே கொஞ்ச நாளில் பல்கி பெருகி வர ஆரம்பித்து, பால்கனி நாஸ்தியாகி போனது. பால்கனி வேண்டும் என்று சொன்ன வீட்டுக்காரம்மா புறாக்களின் எச்சங்களை அள்ளிப்போட்டு கழுவி சுத்தம் பண்ணியே கை அசந்து போனாங்க. ஒரு கட்டத்தில் வெறுத்தே போய்ட்டாங்க.

     ஹை ஜாலி!! அது தானே நமக்கு வேண்டும். அப்படியே கிட்ட போய் இந்த புறாக்கள் வராம இருக்க வலை மாதிரி உள்ள ஸ்க்ரீன் வாங்கி கட்டி விடுவோம். என்ன கொஞ்சம் செலவாகும் என்றேன். அவர்களுக்கு செலவை பற்றி ஒரு கவலை (பின்னே இருக்காதா?) ஒரு பக்கம் மகிழ்ச்சி!! புருஷன் ஆதரவா சொல்றேன்னு. (எப்படி நம்ம கோ ஆபரேஷன் ?) இதுதானய்யா மனுஷனுக்கு வேணும். அதுக்கு தானே ஓடியாடி சம்பாதிக்கிறோம்.

     ஸ்க்ரீனும் போட்டாச்சு, காற்றோட்டமாய் இருக்க அதை இழுத்து கட்டாமல் அசைந்தாடுவது போலும் விட்டாச்சு. ஆனாலும் அந்த ஸ்க்ரீன் அசைந்து விலகும் நேரத்தில், உள்ளே புறாக்கள் புகுந்து திரும்பிப் போக வழி தெரியாமல் வந்து வசமாய் மாட்டிக் கொள்ளும். மாட்டிக்கிச்சா... மாட்டிகிச்சு. இப்ப அவை தானே நமது விருந்தினர்கள்.
                                                                             

                                                        
       இப்ப பிரச்சினையே என்னன்னா அதை பிரியாணி போடுவதா?  குருமா போடுவதா? பொரிப்பதா? ஆக்குவதா? இதுக்கெல்லாம்...Siss. ஆசியா உமர், ஜலீலாக்கா, மல்லிகாக்கா, நாஸியா (பிரியாணி அவங்கதானே) ஸாதிகா, சஸிகா, கீதா ஆச்சல், இன்னும் அறுசுவை தளங்கள் என்னென்ன இருக்கோ அதையெல்லாம் அலசியாகிறது. பெயர் விட்டுப்போனவர்கள் (நான் புதுசு தானே) ஹி..ஹி..சாரி..

      இப்படி தான் ஹுசைனம்மா, அனன்யா மகாதேவன் ஆகியோர்கள் சொல்கிற, எங்களை மாதிரியுள்ள “ரங்கஸ்” களின் பிழைப்பும் ஓடுகிறது!!

**                                                                                                                                                    

**

**

விளம்பர சுவாரஸ்யங்கள்





நம்ம திரிஷா.

பாத்ரூமில் பல்விளக்கிக் கொண்டிருக்கும் ஒருவர் ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. என்று கத்துகிறார். சொல்லிவைத்தார் போல் இவரும் மைக்கை பிடித்துக்கொண்டு "உங்களுக்கு பல்லில் கூச்சமிருக்கா?" என்கிறார். எப்படி இதெல்லாம் இவரால் முடிகிறது !

      இதெல்லாத்தையும் விட கொடுமை. ப்ளைட்டில் போகும் ஒருவருக்கு ஜில் தண்ணி குடித்த வுடன் ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. கிறது. டிக்கெட் போட்டுக்கொண்டு போய் கேட்கிறார். எப்படி சார்?. இந்த விளம்பரம் எடுக்கும் கம்பெனியை ரெண்டு போட்டால் சரியா வரும். நாமெல்லாம் விளம்பரம் பார்ப்பதற்கென்றே, படத்தை பார்க்கிற ஆட்கள் அதிலும் இந்த அழிச்சாட்டியம் தாங்கமுடியலை!


இன்னொரு விளம்பரம் கால்வின் கெவின் என்று நினைக்கிறேன்.

     இதில் ஒரு சிறுவன் அப்பாவிடம் வந்து சாவி கொடு கார் ஓட்டனும் என்கிறான். நீ வளர்ந்த பிறகு என்கிறார். பையன் உடனே போய் பிரிட்ஜிலிருந்து பாலை எடுத்து குடித்து விட்டு வருகிறான். குடித்த பால் கொஞ்சம் மேலுதட்டில் மீசை வரைந்த மாதிரி இருக்க, அப்பாவிடம் அவன் வந்து கார் சாவியை கேட்கும் அழகே அழகு!


இன்னும் என்ன சொல்ல...

இருங்க -

இந்த வார டிஸ்கி போடலன்னா பதிவர்கள் கோச்சுக்குவங்கன்னு சொன்னாங்க.

ஆகவே -

டிஸ்கி : அது டிஷ் சம்பந்தப்பட்டது

முஸ்கி : அது குஷ்பு சம்பந்தப்பட்டது

கிஸ்கி : அது ஹிந்திங்க!!நமக்கு தெரியாது. ஐயோ ஆள விடுங்க!



````````````````````````````````````````````````````````