facebook

புதன், மார்ச் 30, 2011

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!!

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!!


நன்றி : சகோதரர்கள் ஜாகிர் ஹுசைன் & ஷாஜஹான்

நிலநடுக்கத்தால், குறுக்கும் நெடுக்குமாக, பிளக்கப்பட்ட சாலையை பாருங்கள். குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்த சாலையை, மார்ச் 17ந்தேதி ஆரம்பித்து, ஆறு நாட்களுக்குப் பின்னர், பிளவை/சரிவை/
ஆழக் குழியை சரிசெய்து, மீண்டும் அந்த சாலையிலே போக்கு-
வரத்தை, ஏற்படுத்திய விதம்  நம்மை  ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது

10 THINGS TO EMULATE FROM JAPAN

ஜப்பானிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியிலிருந்து நாம் கற்றுக்
கொள்ள வேண்டிய 10 படிப்பினைகள்.

1. THE CALM - அமைதி

Not a single visual of chest-beating or wild grief. Sorrow itself has been elevated.
நெஞ்சில் அடித்துக்கொண்டு அழும் அல்லது இழப்பை தாங்க
முடியாமல் ஒப்பாரி வைத்து அழும் ஒரு காட்சியைக் கூட
காண முடியவில்லை. இழந்த வ‌ருத்தமும், சோகமும் அப்பிய முகங்களினோடு தான் மக்களை பார்க்க முடிந்தது.

2.THE DIGNITY - கண்ணியம்

Disciplined queues for water and groceries. Not a rough word or a crude gesture. தண்ணீருக்காகவும், பொருட்களுக்காகவும், சீராக, ஒழுங்காக
வரிசையில் நின்று பொருட்களை வாங்கிய விதம். முண்டி-
யடித்துக் கொண்டும், ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டும்,
"எனக்கு கிடைக்கவில்லையே" என வசை மாறி பொழிந்துக்
கொண்டும் யாரும் நடக்கவில்லை.

3. THE ABILITY - ஆற்றல், திறமை

The incredible architects, for instance. Buildings swayed but didn’t fall.
நம்ப முடியாத கட்டிடகட்டமைப்பு. கட்டிடங்கள் கொஞ்சம்
ஆட்டங்கண்டாலும், அப்படியே நிலைகுலைந்து சரியாமல்,
இருந்த நிலை. அதை அப்படி கட்டிய திறமைமிக்க வல்லுனர்கள்.
நம் பகுதியில், மறுபாதி கட்டிக் கொண்டிருககும் பொழுதே,
முந்தைய பாதி இடிந்து விழும் அபாயத்தில் தான் நம்
காண்டிராக்டர்கள் நடந்து கொள்கிறார்கள். (எல்லோரும் அல்ல).

4. THE GRACE - நல்ல எண்ணம்/நற்பண்பு

People bought only what they needed for the present, so everybody could get something.
எது இன்றைக்கு வேண்டுமோ/அன்றைய தேவையோ, அதை
மட்டுமே வாங்கியது. இதன் மூலம், மற்றவர்களுக்கும் கிடைக்க
ஏதுவாய் அமைந்தது. பதுக்கல்/கள்ள மார்க்கெட்டில் விலை
உயர்த்தி விற்பது போன்ற செயல்கள் நடைபெறவில்லை

5. THE ORDER - ஒழுங்கு/கட்டுப்பாடு

No looting in shops. No honking and no overtaking on the roads. Just understanding.
சந்தடி சாக்கில், குழப்பமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு,
சூறையாடலும், கொள்ளையடித்தலும் நடக்கவில்லை. கார்
ஹார்னை காது செவிடாகும் அளவிற்கு அடித்து, ரோட்டில்
ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியில் மோசமாக நடந்து
கொள்ளாமை. ஒருவரை ஒருவர் முந்திச் செல்லாமல் இருந்தது.
நன்றாக, ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொண்டது.

6. THE SACRIFICE- தியாகம்/அர்ப்பணிப்பு

Fifty workers stayed back to pump sea water in the N-reactors. How will they ever
be repaid? 50 ஊழியர்கள் அணு உலை இடத்திலேயே தங்கியிருந்து, உலைகளை குளிர்விப்பதற்காக, கடல் தண்ணீரை வாரி
இறைத்தது. அப்படிப்பட்டவர்களுக்கு, எப்படிப்பட்ட கைம்மாறு
செய்யப் போகிறார்கள்?

7. THE TENDERNESS - அன்பு/கருணையின் அடிப்படையில்
மக்களின் நலன் காத்து பேணுதல்

Restaurants cut prices. An unguarded ATM is left alone. The strong cared for the weak.
உணவகங்கள் சாப்பாட்டு விலையை குறைத்துக் கொண்டன.
ஏ.டி.எம்(தானியங்கி பண பட்டுவாடா கருவி) எந்த வித பாதுகாப்பு-
மின்றி, தனித்து விடப்பட்ட நிலையிலும் பாதுகாப்பாக இருந்தது.
பலம் வாய்ந்தவர்கள், பலவீனர்களை கவனித்து கொண்டது.

8. THE TRAINING - பயிற்சி

The old and the children, everyone knew exactly what to do. And they did just that.
வயது முதிர்ந்தவர்களும், குழந்தைகளும்,என்ன செய்ய வேண்டு-
மென்பதை அவரவர் அறிந்து வைத்திருந்தது/அதன்படி நடந்து
கொண்டது.

9. THE MEDIA - பத்திரிக்கை/ரேடியோ/தொலைக்காட்சிகள்
நடந்த விதம்

They showed magnificent restraint in the bulletins. No silly reporters. Only calm reportage. பத்திரிக்கை/ரேடியோ/தொலைக்காட்சிகள் நடந்து கொண்ட‌
விதம். செய்தித்தாள்களிலும், செய்தி அறிக்கைகளிலும், சுயகட்டுப்-
பாட்டோடு நடந்துக் கொண்டது. “நான்”, “நீ” என்று போட்டி போட்டு
செய்தி வெளியிடாமல், அமைதியான முறையில் செய்தி
வெளியிட்டார்கள். நம் சேனல்கள், "என்னால் தான் இந்த நில-
நடுக்கமே நடந்தது" என்றும், “இதை வெளியிட்ட முதல் சேனல்
நாங்கள் தான்” என்று மார்தட்டிக்கொண்டு நடந்திருப்பார்கள்.

10.THE CONSCIENCE - மனசாட்சியின் அடிப்படையில் நடந்து
கொண்டது.

When the power went off in a store, people put things back on the shelves
and left quietly.
சூப்பர் மார்க்கெட்டில், மின்சாரம் நின்று போனவுடன், எடுத்த
பொருட்களை அந்தந்த அலமாரிகளிலேயே திரும்ப வைத்து
விட்டு, அமைதியாக திரும்பியது.

May we learn few good things from our fellow beings and Be Good to all beings…..

நன்றி : கூகிள்


சனி, மார்ச் 26, 2011

சின்ன சின்ன சந்தோஷங்கள்


படம் : ஆசியா உமர் அனுமதியுடன்! நன்றி!! 

சின்ன சின்ன சந்தோஷங்கள்
நேற்றைக்கு முந்தியதினம் ஃபேஸ்புக்கில் சகோதரி ஆசியா
உமர், தனது மகன் ZAAHID பள்ளியில் எல்லோர் முன்னிலையிலும்
டிகிரி முடித்து விட்டு பட்டம் வாங்குவதற்கு நிகரான
கான்வகேஷன் உடையுடன் நின்று பள்ளி cbsc syllabbus, ஃபேர்வெல்
டேயை grade-12 completion n merit certificate-ஐ பெற்றுக் கொள்ளும்
புகை படத்தினை வெளியிட்டு மகிழ்ந்தார்கள். ‘ஈன்ற பொழுதில்’  பெற்றோர்களுக்கு வாழ்வில் இதை விட வேறென்ன மகிழ்ச்சி
இருக்க முடியும். அந்த ஒரு காட்சியே கண்கொள்ளா காட்சியாக அமைந்திருக்கும். (அதை பதிவாய் வெளியிடுங்கள் சகோ:-)

அந்த 'தம்பி' மென்மேலும் படித்து தன் பெற்றோர்களுக்கு
தங்கமகனாய், வாழ்வில் எல்லாநிலையிலும் சிறந்து விளங்கிட
'ஆஹா பக்கங்கள்’ தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறது!

இந்த நேரத்தில் எங்கள் ‘உம்மா’வின் சின்ன ஃப்ளாஷ்பேக்.

எங்கள்  வீட்டின் தெரு வழியே பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்
களையோ சிறுமிகளையோ காணும் போதெல்லாம் எங்க உம்மா, அவர்களை தன் கிட்ட அழைத்து, தெரிந்த பிள்ளையாய்
இருந்தாலும் சரி ; இல்லாவிடில் "நீங்க  யார் வீட்டுப் பிள்ளைம்மா?"
என்று கேட்டு தெரிந்துக் கொண்டு, அந்த பிள்ளையிடம், "என்ன படிக்கிறீங்க?" என்றும் "என்ன படிக்கப் போறீங்க?" என்று கேட்டு ஆர்வமூட்டியும் "நீங்க நிறைய படிச்சு பெரிய ஆளா வரணும்"
என்று ஊக்கப் படுத்துவார்கள்.

அதன் பின்னர் பிள்ளைகளுக்கு தலைவாரி, முகத்தில் பவுடர்
தடவி, வீட்டில் செய்து வைத்திருக்கும் ஏதாவது தின்பண்டங்களை அவர்களுக்கு தின்னக்கொடுத்து "ரோட்டில் பார்த்து நடந்து
போம்மா" என்று சொல்லி சந்தோஷமாய் வழியனுப்பி வைப்பார்கள்.
அவர்களுக்கு இந்த மாதிரி பிள்ளைகளை காணும்போது பரவசம்
தொற்றிக் கொள்வதை பலமுறை பார்த்து உணர்ந்திருக்கிறேன்.

அதுபோலவே சபர் (பயணம்) சென்றுவிட்டு இவர்களை
காணவரும் சொந்த பந்த பிள்ளைகளிடம், எல்லா சுகநலன்களும் விசாரித்துவிட்டு, அருந்த, சாப்பிட கொடுத்தப் பிறகு, அவர்கள்
புறப்பட்டு செல்லும் சமயம், "நீங்க சம்பாதிப்பதில் உங்கள்
பெற்றோர்க்கும், குடும்பத்தார்க்கும், தாராளமாகக் கொடுங்கள்.
அதுவே பெருமை என்று இருந்து விடாதீர்கள். கொஞ்சம்
உங்கள் எதிர் காலத்திற்கும் சேர்த்து வைக்க மறந்து விடாதீர்கள்" என்பார்கள்.

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், ஆசியா உமரின்
அந்த பகிர்வு ‘இந்த மகனுக்கும்’ பழைய நினைவுகளை மீட்டுக்
கொண்டு வந்து உங்களோடு பகிர வைத்து விட்டது. நன்றி!!

**********************************************************************************
 சவுதியில் புழுதிப் புயல்

சகோதர பதிவர்கள் அழைத்த தொடர் பதிவை தொடர  இன்னும்
நேரம் சரியாய் கூடிவரவில்லை!!

நேற்றிரவு தொடங்கி இதை  பதிவிடும் வரையிலும்,
சவுதியிலும்  அதை சுற்றியுள்ள நாடுகளிலும் "புழுதிப்  புயல்"  
அடித்துக்  கொண்டிருக்கிறது. வானத்திலிருந்து மழைக்கு பதில்
 மண்ணாய்  கொட்டுகிறது. ரோட்டில்  நடக்க  முடியவில்லை!!
எதிரில் வரும் வாகனங்கள் புலப்படவில்லை.  கார்களை
அங்கங்கே வழியில் நிறுத்திவிட்டு, வாகன ஓட்டிகள் அலை-
பேசியில் உரியவர்களுக்கு தகவல் சொல்லிக் கொண்டிருக்-
கிறார்கள். காற்றும் குளிராய் வீசுகிறது. சங்கடமாய் இருக்கிறது.
நண்பர்கள் அனைவர்களும் கவனமாய் இருக்க வேண்டுகிறேன்!!

செவ்வாய், மார்ச் 22, 2011

சவுதி சவுதி




சவுதி சவுதி

நான் சவுதிக்கு வந்து எத்தனை வருஷமாச்சுன்னு எனக்கே
தெரியல! விடுங்க! அதுவா முக்கியம். எழுத வந்த தகவல்
முக்கியம். அத முதல்ல பார்ப்போம். முதன் முதலா வந்து
சேர்ந்தது மிகப் பெரிய கம்பெனி.  அவங்க கொடுத்த ஃப்ரீ விசா-
வில் நாங்கள் எல்லோரும், டெல்லி ஏஜெண்ட் வழியாக இங்கே
வந்து சேர்ந்தோம்.

கிட்டத்தட்ட ஐயாயிரம் பேர் அந்த கம்பெனியில் வேலைப் பார்த்து வந்தார்கள். சவுதியில் எல்லாப் பகுதிகளிலும் அதன் கிளைகள்
பறந்து விரிந்து கிடந்தது. எல்லாமே நல்லா தான் போய்க்
கொண்டிருந்தது.  முதல் வெகேஷன் போய் வந்த பின்

எனக்கு பிடிக்கலையோ, இல்லை  அவங்களுக்கு என்னை
பிடிக்கலையோ தெரியல! ரிலீஸ் தந்துட்டாங்க. அப்பவெல்லாம்
ரிலீஸ் என்பது சர்வ சாதாரணம் பெரிய கம்பெனியா இருக்கிறதால
தானே வேலையும் அதிகமா இருக்கு, சின்ன கம்பெனியா பார்த்து
சேரலாமேன்னு தேடி தேடித் பார்த்து சேர்ந்தேங்க. அது ஒரு
சப்ளையர் கம்பெனி. இருக்கிற நாலஞ்சு சேல்ஸ்மேன்கள் பெரிய
பெரிய கம்பெனிகளுக்கு சாமான்களை எடுத்துக்கொண்டு காலையில் போகிறவர்கள், மாலையில் தான் திரும்ப வருவார்கள்.

அப்ப நானும் ஒரு ஆபீஸ் பாயும் தான் இருப்போம். அவர்
ரொம்ப விபரம் தெரிந்தவர். 'வேக்குவம்' போட்டு விட்டு,
எல்லோருக்கும் டீ காபி போட்டுக் கொடுத்து விட்டு, போஸ்ட்
பாக்ஸில் லெட்டர்  எடுத்து வருகிறேன் பேர்வழி என்று
கம்பி நீட்டுகிறவர் மாலையில்  நாலு மணிக்கு தான் திரும்ப
வருவார்.

அப்பவெல்லாம் கம்பியூட்டரும், இன்டர்நெட்டும் வராத காலம்.
தனியே இருந்துக் கொண்டு எவ்வளவு பேருக்கு தான் லெட்டர்
எழுதுவது.  அதுவும் போரடிச்சு போச்சு. இப்படியே இருந்தா ஒரு
வேலையும் கற்றுக் கொள்ளாம காலம் பூரா இருந்து விட
வேண்டியது தான் என்று மனசு குறுகுறுத்தது. என்ன
பண்ணலாம் யோசித்தேன்!!!!

                                                                                              ((((தொடரும்))))

*****************@@@@@@@@************@@@@@@@**********@@@@@@@


சவுதியில் நிறைய பாடகர்கள் வரிசையில் 'நான்ஸி' ரசிகர்கள்
கூட்டமும் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டவே "சவுதி
சவுதி" பதிவில் அதுவும் குறிப்பிட்டு  சேர்க்கப்பட்டிருந்தது.
இப்ப இதில் பதிந்த பதிவு  நீக்கப்பட்டது!



புதன், மார்ச் 16, 2011

“மெல்ல – வாய் மெல்ல”...!!


“மெல்ல – வாய் மெல்ல”...!!

 இந்த வாரம் ஹைபர் மார்க்கெட்டில் பணிபுரியும் நண்பர்களை
காண நேர்ந்தது. அவர்களில் திராட்சை, முந்திரி, நட்ஸ் Sales + Packing
பிரிவில் பணிபுரியும் நண்பர் மகா கிண்டல் பேர்வழி. அவரிடம்
பேச்சுக் கொடுத்து, பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு பிடி
முந்திரியை அள்ளி என் கையில் கொடுத்து "சாப்பிடுங்க" என்றார்.
அவரும் ஒரு பிடி வாயில் அள்ளி போட்டுக் கொண்டார். நானும்
ஒவ்வொன்றாய் வாயில் போட்டு மென்றுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தேன்.

பிறகு தான் கவனித்தேன். அவரும் ஒரு பிடி வாயில் அள்ளி
போட்டாரே, அதை மென்று சாப்பிடும் ஒரு வாயசைவோ எந்த
ஒரு சிம்டம்சும் காணோமே எப்படி சாப்பிட்டார் திகைப்பாய்
இருந்தது!

அவரிடமே கேட்டேன்.

"அதை ஏன் கேட்கிறீங்க. இங்கே இருக்கிற மேனேஜர் மிஸிரியும்
(Egypt), சூப்பர்வைசர் ஹிந்திகாரனும் பொல்லாதவனுவ! அவனுக
இந்த பக்கம் சூப்பர் வைசிங் வரும்போது யாருடைய வாய்
அசைந்தாலும் ஒரு நாள் சம்பளம் கட் பண்ணிடுறாங்க!

"பேசிக்கிட்டிருந்தா கூட வாயசையுமே!"

"இது சாப்பிடும்போது வாயசையுமே அந்த அசைவு"

"அது சரி. அதனால..!!

"நாங்கல்லாம் மொதல்ல எல்லாரும் எதிர்ப்பு தெரிவிச்சோம்!
அவனுக அதை மதிக்கவே இல்ல. பிறகு ஒன்னா கூடி
யோசிச்சோம்"

"என்னான்னு"

"இனி நாம எது வேணும்னாலும் சாப்பிடனும் ஆனா அவனுகளுக்கு தெரியக்கூடாது!!”

“எப்படி?"

"அப்படி கேளுங்க!"

"முன்பெல்லாம் ஒன்று ரெண்டு பாதாமோ, முந்திரியோ எடுத்து
வாயில் போட்டோம்னா அதை யாரும் பார்த்துடாமே மென்று
முழுங்கவே சிரமப்பட்டோம்".

"சரி"

"இப்ப என்னடான்னா ஒரு பிடி வாயில் அள்ளி போட்டாலும்,
வாயசையாமலே சாப்பிட்டிடுவோம்"

"எப்படிங்க...??" பதட்டத்துடன் கேட்டேன்.

"நீங்க ஒன்னும் ஆயாசப்படாதீங்க!அதை நாக்கால் அரைத்து
கரைத்தே கஸ்டமரிடம் பேசுவது போல, உள்ளே தள்ளிடுவோம். வாயசையாது. யாருக்கும் நாங்க சாப்பிடுறோம் என்பதும் வெளியே தெரியாது"

"அப்படியா" கிர்ர்ர்ர்ர்ர் ஆனேன்.

என்னாங்க இது இவங்க இப்படி பண்றாங்க!! எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்க!! நம்ம பசங்க இல்லையா!! காலரை தூக்கி விட
நினைத்து, காரை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

 @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

SPECIAL EDITION

இந்திய துணை தூதரக அலுவலகம் - ஜித்தா அறிவிப்பு

• சவுதி அரேபியாவின் பொது மன்னிப்பு அறிவிப்பு கீழ்கண்ட
வைகளுக்கு மட்டும்தான் பொருந்தும் என அறிவிக்கப்படுகின்றது :

உம்ரா/ஹஜ்/ விசிட் விசா போன்றவற்றில் அதிக நாட்கள் தங்கி இருப்பவர்கள்.

இந்த பொது மன்னிப்பு 23 மார்ச் 2011 ல் முடிவடைகின்றது.
உம்ரா/ஹஜ்/ விசிட் விசா போன்றவற்றில் அதிக நாட்கள் தங்கி
இருப்பவர்கள் உடனடியாக இந்த சந்தர்பத்தை மார்ச் 23 க்கு
முன்பாகவே பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுருத்தப்
படுகின்றர்கள்.

• இந்த பொது மன்னிப்பு, வேலை சம்பந்தப்பட்ட விசாவில்
வந்தவர்களுக்கு இல்லை. அதுபோல் HURBOOB - வேலையிலிருந்து
ஓடிச் சென்றவர்களுக்குமல்ல - அதன் பிரச்சனையில் உள்ளவர் வர்களுக்கும் அல்ல.

• யாரெல்லாம் இந்த குறுப்பிட்ட காலத்திற்குள் நாடு செல்ல
வில்லையோ, அவர்கள் அபராத தொகை கட்ட நேரிடும், மேலும்
அவர்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்க நேரிடும்.

• யாரிடத்தில் ஒரிஜினல் பாஸ்போர்ட் அட்டை இல்லையோ,
அவர்கள் அவுட்பாஸ் (out pass) பேப்பரும், ஜவாஜாத் அலுவலகத்-
திலிருந்து உம்ரா/ஹஜ் விசாவிற்காண அத்தாட்சி பேப்பரையும்
கொண்டு வரவேண்டும்.

அவசர சான்றிதல் - அவுட்பாஸ் பெறுவது எப்படி? :

• சம்பந்தப்பட்ட நபர்கள், அவர்களின் பாஸ்போர்ட் காப்பியும்,
அத்துடன் ரேஷன் கார்டு அல்லது கார் வாகன வோட்டு
சான்றிதல், அல்லது எலக்ட்ரிகல் கார்டு அல்லது ஏதாவது
இந்தியன் அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கத்தின்
போட்டோ அடையாள அட்டை ஆகிய ஏதாவது ஓன்றை
வைத்து அவுட்பாஸ் விண்ணப்பிக்கவேண்டும்.

• இந்த அவுட்பாஸ் 3 மாதத்திற்கு செல்லுபடியாகும்.

HUROOB CASES - வேலையிலிருந்து ஓடிச் சென்றவர்கள்

• ஹுரூப் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களின் கஃபீலிடத்திலிருந்து
NOC certificate - பிரச்சனை இல்லை என்ற சான்றிதல் வைத்திருக்க வேண்டும்.

• ஜவாஜாத் - Jawazat போலீஸ் பாதுகாவலில் வைக்கப்பட்டு, தர்ஹீல்
என்ற போலீஸ் நிலையதிலிருந்து அனுப்பப்படுவார்கள்.

• இந்த பொது மன்னிப்பு, HURBOOB CASES - வேலையிலிருந்து ஓடிச் சென்றவர்கள் - அதன் பிரச்சனையில் உள்ளவர்களுக்கும் அல்ல.

• தாயகத்திற்கு திரும்ப அவசர சான்றிதல் -அவுட்பாஸ் மட்டும் போதுமானதல்ல.

• ஹுரூப் சம்பந்தப்பட்டவர்கள், இந்நாட்டு சட்டப்படி, அவர்களின்
கஃபீலிடம் சென்று அவர்கள் பிரச்னைகளை முடித்து கொள்ள
வேண்டும்.

திங்கள், மார்ச் 14, 2011

படிக்க வந்த மாணவர்கள்!!


படிக்க வந்த மாணவர்கள்!!


“தேவதை வரும் நேரம்” எழுதிக் கொண்டிருக்கும் போது அந்த
உருவம் நிழலாடியது என்று நான் முடித்திருந்தேன்.

நான் ஜாமியா மதரசாவில் குரான் ஓதப் போய்க் கொண்டிருக்கிற காலத்தில், அங்குள்ள ஹஜரத் (பேரா-விரிவுரையாளர்) குரான்
ஓதிக் (படித்துக்) கொடுக்கும் அழகையும், அவர் சொல்லிக்
கொடுக்கிற விளக்கங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே வெளியூர்களில் இருந்து நிறைய மாணவர்கள்
படிக்க வருவார்கள். அப்படி போய்க் கொண்டிருந்த ஒரு காலக்
கட்டத்தில் தான் அந்த செய்தியை எங்களுக்குச் சொன்னார்கள்.

கொஞ்சம் தைரியமில்லாதவர்கள் மேற்கொண்டு படிக்காமல்
இப்படியே அங்கிட்டுப் போய் இன்ட்லி மற்றும் தமிழ்மணத்திலும்
ஒட்டு போட்டு விட்டு அவசியம் பின்னூட்டமும் எழுதிவிட்டு
தைரியமாக செல்லும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

ஸ்ரீலங்காவில் இருந்து இரண்டு மாணவர்கள் அவரிடம் பாடம்
கற்றுக் கொள்ள வந்து சேர்ந்து, ஹாஸ்டலிலும் இடம் கேட்டு
வாங்கி தங்கி இருக்கிறார்கள். அந்த ரூமில் மொத்தம் இவர்களல்-
லாமல் மேலும் மூன்று பேர் ஆக மொத்தம் ஐந்து பேர்.

அந்த மூவரும் மற்ற நண்பர்களோடு சேர்ந்து சிரித்துப் பேசி
விளையாடி மகிழ்வதும் கும்மாளமடிப்பதுமாய் இருந்தாலும்,
அந்த ஸ்ரீலங்கா நண்பர்கள் மட்டும் தனித்தே போவதும்
வருவதுமாய் இருந்த- தோடல்லாமல், மற்ற மூவரோடும்
சேர்ந்து வெளிய தெருவே கூட போவதில்லை. இது
மற்றவர்களுக்கு ஒரு உறுத்தலாகவே இருந்திருக்கிறது!!

ஒரு விடுமுறை நாளில் அந்த மூவரும் பக்கத்தில் இருக்கிற தியேட்டருக்கு சென்று படம் பார்க்கலாம் என்று திட்டமிட்டு
கிளம்பி போய் இருக்கிறார்கள். மாலை முதல் ஷோ பார்த்து
விட்டு ஹோட்டலில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ரூமுக்கு
திரும்பி வர இரவு பதினோரு மணியாகி விட்டது.

அந்த இரண்டு இலங்கை மாணவர்களும் மற்ற நண்பர்கள்
சினிமாவுக்கு போன போதும் அவர்களோடு இவர்கள்
போகாமல் வேறெங்கோ போய்விட்டு, அவர்கள் எல்லோரும்
ரூமுக்கு திரும்பி வந்து படுத்துறங்கிய பின் தான் வந்திருக்-
கிறார்கள்.

சப்தமில்லாமல் லைட்டைப் போட்டு இவர்கள் டிரஸ் மாற்றிக்
கொண்டு, பாத்ரூம் போய்விட்டு அலைந்து விட்டு வந்த அசதியில் கலைத்து போய் படுத்து விட்டார்கள். படுத்தப் பிறகு தான் தெரிந்தது லைட்டை அணைக்காமல் படுத்து விட்டோமே என்று!

மற்ற நண்பர் "ஸ்ஸ்ஸ்...லைட்டை ஆஃப் பண்ணுடா" என்று
ஹஸ்கியாய் இவரிடம் சொல்லவும், இவரும் கையை நீட்டி-
யிருக்கிறார். சுவரில் இருந்த சுவிட்ச் கைக்கு எட்டவில்லை.
எழுந்திருக்க அலுப்பு பட்டுக்கொண்டு நீட்டிய கையை இன்னும்
கொஞ்சம் நீளமாய் நீட்ட, அது நீண்டு கொண்டே போய் சுவிட்ச்
ஆஃப் செய்திருக்கிறது.

இந்தக் காட்சியை, மூவரில் ஒருவர் தூக்கம் வராமல் புரண்டு
படுத்துக் கொண்டிருக்கும் போது பார்த்து விட, பதறிப் போய்
சப்தம் போடாமல் வாயை மூடிக் கொண்டு திக்பிரமையாகிப்
போய், மற்ற இருவரிடம் விடிந்ததும் விஷயத்தை சொல்ல,
பிறகு ஹஜரத்திடம் சென்று முறையிட்டிருக்கிறார்கள்.

ஹஜரத்துக்கு வந்திருப்பவர்கள் இருவரும் யாரென்ற உண்மை
விளங்கி விட்டது. 'ஜின்கள்' என்ற என்ற படைப்புகள்தான் அவை!

(“ஜின்களும் இறைவனுடைய படைப்புகள்தான். நெருப்பாலோ
ஒளியாலோ படைக்கப்பட்டவர்கள். எந்த ரூபத்திலும் வருவார்கள்.
அதில் நல்லவர்களும் கெட்டவர்களும் உண்டு.)

ஹஜரத் அ(வை) (வர்)களை   அழைத்து வரச்சொல்லி....

"நீங்கள் எதற்கு இங்கே வந்தீர்கள்"

"நீங்கள் ஓதும் அழகையும், அதற்கு இலகுவாக சொல்லும்
விளக்கங்- களையும் பலர் சொல்லக் கேட்டு தான் நாங்களும்
இங்கு வந்து சேர்ந்தோம்"

"அப்படியானால் மாணவர்கள் பயிலும் இடங்களுக்கு நீங்கள்
வந்து தொந்தரவு செய்ய வேணாம் நீங்கள் இங்கிருந்து போய்
விடுங்கள்" என்று ஹஜரத் சொல்ல, அவைகள் சென்று விட்டதாக சொன்னார்கள்!!

திங்கள், மார்ச் 07, 2011

"நாகூர் பப்படம்"


நாகூர் எழுத்தாளர்களில் இவருடைய எழுத்து நடை
கொஞ்சம் லாவகமானது. இடையிடையே பழமொழிகளும்,
ஊரின் எல்லையில்லா பேச்சு வழக்குகளும் வந்து வந்து கண்சிமிட்டிவிட்டுப் போகும் ஜாலம் படிப்பவர்களை கட்டிப்-
போடும். பஹ்ரைனில் வாழும் சகோதரர் அப்துல் கையும்
‘அந்த நாள் ஞாபகம்’ என்ற நூலையும் ‘போன்சாய் – குட்டிக்
கவிதைகள்’ என்ற புதுக்கவிதை தொகுப்பையும் வெளியிட்-
டுள்ளார். ‘நாகூரி’ என்ற புனைபெயரில் நாகூர் பிஸாது
கிளப்-ஐ முன்பு கலக்கியவர் இவர்தான். .


நாகூர் மண்வாசனை
- அப்துல் கையூம்

"நாகூர் பப்படம்"

ஊர் பற்றிய குட்டிக்கதை ஒன்று நினைவுக்கு வந்தது. மங்களம்
என்ற பெண்மணியும் அவளது சகோதரியும் ஆத்தங்கரைக்கு
குளிக்கச் சென்றார்களாம். அப்போது மங்களத்தை ஆற்றுத்
தண்ணீர் அடித்துக்கொண்டு போய் விட்டதாம். “அடி அக்கா!
மங்களம்! போயிட்டியே!” என்று அழுது புரண்டு அலறி அடித்துக்
கொண்டு வீதியில் அவள் தோழி ஓடி வந்தாளாம். அந்த நேரத்தில்
ஊருக்கு புதிதாக வந்த வெள்ளைக்கார துரை அவளிடம் சென்று
“What is the name of this place?” கேட்க, ஒப்பாரியை நிறுத்தாமல் “அடி
அக்கா! மங்களம்” என்று மறுபடியும் கூவியிருக்கிறாள். இதுதான்
இந்த ஊரின் பெயர் என்று எண்ணி “அடியக்க மங்கலம்” என்று
பெயர் வைத்துவிட்டு போய்விட்டானாம் வெள்ளைக்காரதுரை.

இது ஒரு வேடிக்கைக்காக சொல்லப்படும் கதைதான். “அடியற்கை மங்கலம்” அல்லது “அடியார்க்கு மங்கலம்” என்றுதான் உண்மை-
யிலேயே இருந்திருக்க வேண்டும். அடியார்களுக்கு மங்கலம்
உண்டாக்கக் கூடிய இடமாக அது இருந்திருக்கிறது.

இதுபோன்ற எத்தனையோ கதைகள் நம்மிடையே உலவுகின்றன

முந்திரிக்கொட்டை விற்றுக் கொண்டிருந்தாளாம் ஒரு கூடைக்காரி. அவளிடம் சென்று வெள்ளைக்கார துரை “How much is this?” என்று
கேட்க, கேள்வியைப் புரிந்துக்கொண்ட பெண்மணி “காசுக்கு எட்டு”
என்று சொன்னாளாம். அதுவே பின்னர் “Cashew Nut” என்று ஆங்கிலப் பெயராக ஆகிவிட்டதாம்.

தயாரிப்பு நம்முடையதாக இருந்த போதிலும் அதற்கு பெயர்
வைப்பதும், விலைநிர்ணயம் செய்வதும் வெள்ளைக்கார துரை கையில்தான் இருந்தது.

ஊரான் ஊரான் தோட்டத்துலே

ஒருத்தன் போட்டா வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி

காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்

என்ற நாட்டுப்பாடல் இவ்வுண்மையை உணர்த்தும்.

இரண்டாம் உலகப்போரின் போது நாகூர் மக்களின் குடிசைத்
தொழிலாக தடுக்கு முடைதல், பாய் முடைதல், ஓலை விசிறி,
சங்கு வெட்டி பாலிஷ் செய்தல், சுருட்டு தயாரிப்பு, பப்படம்
செய்தல் இப்படி பலதரப்பட்ட கைத்தொழில்கள் வாழ்வாதரமாக
இருந்திருக்கிறது.

நாகூருக்கு வந்த வெள்ளைக்கார துரை பப்படத்தை பார்த்து விட்டு
“வாவ்! வாட் இஸ் திஸ்?” என்று கேட்க, “திஸ் இஸ் பப்படம்” என்று
யாரோ சொல்ல “வொண்டர்ஃபுல் நேம். பப்படம்” என்று சொல்லி
விட்டு ஆங்கில அகராதியிலும் இந்த “பப்படத்தை” ஏற்றி
விட்டானாம்.

“பெரிய நானா” (Big Brother) டிவிஷோவில் Jade Goody ஷில்பா
ஷெட்டியை பப்படம் என்று வசைபாட இந்த ‘பப்படம்’ அகில
உலகத்திலும் பிரபலமாகி விட்டது. இனவெறி கண்ணோட்டத்தில் திட்டியதாக சர்ச்சை எழுந்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சொற்பதம் ‘பன்னாடை’ ‘பரதேசி’ என்று பொருள்படும்படி வசை பாட அவர்களுக்கு பயன்படுகிறதாம். ஷில்பாவின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது “பப்படம்” என்ற இந்த வார்த்தைதான்.

அடப்பாவிகளா! தின்பதற்காக பயன்படும் உணவுப் பண்டத்தை எப்படியெல்லாம் உதாரணம் காட்ட பயன்படுத்துகிறார்கள் என்று
திட்டித் தீர்க்கலாமே என்று பார்த்தால், நாம் மட்டும் என்ன
யோக்கியமா என்று எனக்குள்ளே கேள்வி எழுந்தது. ‘நொந்துப் போய்விட்டேன்’ என்று சொல்வதற்கு ‘நொந்து நூடுல்ஸாகி
விட்டேன்’ என்று சீன உணவுப்பொருளை நாம் சொல்வதில்லையா? சீனாக்காரன் இதைக் கேள்விப்பட்டால் அவன் முதலில் நொந்து நூடுல்ஸாகி விடுவான்.

தமிழ்நாட்டில் ஏதாவதொரு திரைப்படம் Flop ஆகிவிட்டால் “படம்
பொப்படம் ஆகிவிட்டது” என்று சொல்வதுண்டு.

நாகூரைப் பொறுத்தவரை நீளமாக உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் அயிட்டத்திற்கு பப்படம் என்று பெயர். வட்ட வடிவமாக இருப்பதற்குப் பெயர் அப்பளம். பப்படம் Unbranded goods. அப்பளம் Branded goods. (உதாரணம் அம்மாமி அப்பளம், பாப்புலர் அப்பளம்). ‘பொப்படம்’ என்ற பெயரில் அயர்லாந்தில் பிரபலமான உணவகம் ஒன்று இருக்கிறது.

அப்பளம் தயாரிப்பில் பிராமணர்கள் பிரசித்தம் என்றுச் சொன்னால் பப்படம் தயாரிப்பில் நம்மவர்கள் பிரசித்தம். நாகூர் சாப்பாட்டு
மெனுவில் பப்படம் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும்.

பொதுவாக அப்பளம் என்று தமிழகத்திலும், அப்படம் என்று
தெலுங்கிலும், அப்பளா என்று துளு மொழியிலும், ஹப்பளா என்று கன்னடத்திலும், பாப்பட் என்று இந்தியிலும் அழைக்கப்படுகிறது.

அப்பள வியாபாரத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முன்பு
குதித்தது ஞாபகமிருக்கும். இந்தி தாரகை ஷில்பா ஷெட்டியும்
அப்பளச் சட்டியில் டைவ் அடித்து விட்டார். நாளை ‘நானகத்தா’
தயாரிப்பில் ‘லாரா தத்தா’ இறங்கினாலும் ஆச்சரியப்
படுவதற்கில்லை.

ஷில்பாவின் தயாரிப்புக்குப் பெயர் “ஷில்பா பொப்படம்”.

நம்ம ஊரில் ஜொஹராமா லாத்தாவும், சின்னாச்சிமாவும் இந்த
பப்படம் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது எனக்கு நினைவில்
இருக்கிறது. ஒரு சிறிய உருண்டை பொப்பட மாவை கையில்
வைத்துக் கொண்டு, பலகைக்கட்டையில் லாவகமாக உருட்டி
ஒரு கட்டு பப்படத்தை தயாரித்து விடுவார் சின்னாச்சிமா.

ஷில்பாவின் டெக்னிக்கை பின்பற்றி இருந்தால் இந்நேரம்
“சின்னாச்சிமா பப்படம்” உலகச் சந்தையில் விற்பனையில்
போட்டி போட்டிருக்கும்.

ஷில்பாவும் ஜேட் கூட்டியும் தோழிகளாகினர். ஜேட் கூட்டி
கேன்சர் ஏற்பட்டு மறைந்தும் விட்டார். ‘பொப்படம்’ என்ற இந்தப்
பெயரை தன் தோழியின் நினைவாக வைத்திருப்பதாக அவர்
சொன்னது மனதை நெகிழ வைத்தது. ஜேட் கூட்டி மரணத்திற்கு
முன்பு சாப்பிட ஆசைப்பட்டது எது தெரியுமா? பொப்படம்தான்.



புதன், மார்ச் 02, 2011

நேற்றை போல் இன்றும் ஒரு தகவல்!!



எப்போது ஷாப்பிங் போனாலும் என் நண்பர் ஷர்மாஜி தான் கூட
வருவார். சும்மா ஒரு பாதுகாப்பு பிளஸ் பேச்சு துணைக்கு தான்.
எனக்கு பாதுகாப்பா என்று விழி உயர்த்தாதீர்கள். நாடு இப்ப
ரொம்ப கெட்டு கிடக்கு! நடந்து போனாலே பர்ஸ் பிளஸ் செல்
போனை இழப்பது நிச்சயம்.

அந்த ஹைபர் மார்க்கெட்டில் நடந்து தேவையானவற்றை எடுத்து ட்ராலியில் நான் போட்டுக் கொண்டிருக்கும் போதே, ஷர்மாஜி
என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.

"லிபியாவைப் போல பஹ்ரைனிலும் கிளர்ச்சி அதிகரித்து
விட்டதே, அப்படி என்றால் இங்கே (சவுதியில்) என்னாகும்"
என்றார்.

"ஒன்றும் ஆகாது" என்றேன்

"எப்படி சொல்றீங்க"

"விக்கி லீக்ஸ் விஷயம் சென்ற மாதம் புயலாய் அடித்ததே ஞாபகமிருக்கா?"

"இல்லாமலா?"

"இப்ப அது என்னாச்சு? எல்லா அரபு நாடுகளிலும் கிளர்ச்சியை உண்டாக்குவது போல் ஒரு மாயையை உண்டாக்கி அவைகளை மறக்கடிக்கிற மாதிரி மறக்கடிச்சு, நிம்மதியாய் ஆள்பவர்களின்
மனதில் பீதியை உண்டாக்கிட்டாங்களே கவனிச்சிங்களா??

"அட ஆமா!!"

"அதுவுமில்லாம இப்ப மன்னர் 'ஃபேஸ் புக்கை' விலைபேசி
வாங்கப் போறதா வேற நியூஸ் அடிபடுது"

"ஓ..... இது வேறயா?"

"திடீர்னு தமிழக அரசு பெட்ரோல் விலைய கொறச்சுட்டாங்களே,
அதப் பத்தி சொல்லுங்க, கவர்ன்மெண்டுக்கு நஷ்டமாமே?"

"லாபம்னு சொல்லுங்க!"

"எந்த விதத்தில்?"

"அப்படி கேளுங்க?"

"இப்ப 1.38 பைசா  கொறச்சதாலே, 10 லிட்டர் போட்டா ரூபாய் 13
முதல், 14 ரூபாய் வரை லாபம் என்னமோ நமக்கு தான், ஆனா
அவங்க கணக்கு ‘ஓட்டல்லவா’?"

"அது சரி!"

"பின்னரும் யார் ஜெயிச்சு வந்தாலும் லிட்டருக்கு மூன்று
ரூபாயோ, அஞ்சு ரூபாயோ ஏத்தத்தான் போறாங்க!"

"அம்மாடி!"

"இதுக்கே இப்படி சொல்றீங்களே, இந்தியாவுக்கு வருகிற ஒரு
லிட்டர் பெட்ரோலின் அடக்க விலையை இங்கே பாருங்க!"

"சரி தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கா?"

"நெத்திச்சுட்டியா போட்டா  உயரும், கழுத்தில போட்டா தாழும்!"

"ஜோக்கடிக்காதிங்க?"

"பின்ன நானென்ன தங்கம் விலைய நிர்ணயிக்கிற அந்த
11 பேரில் ஒருத்தரா?"

"எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே? ஆமா இங்க அதுக்குள்ளே வெயிலடிக்க ஆரம்பிச்சுடுச்சே, குளிர் போயிடுச்சா?"

"அது சவுதி கிளைமேட், வரும் போவும்"

"அது சரி நாமெல்லாம் ஃபாரினில் இருந்தாலும், ஒட்டு போடும்
முறை இங்கே அறிமுகமாகியிருக்கே கவனிச்சிங்களா?"

"அப்படியா? அப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா மொத மொத
லைஃப்ல இப்ப தான் ஒட்டு போடப் போறேன்!!"

பேசிக் கொண்டே ஷர்மாஜி, ஆறேழு வயசு குழந்தைகள் யூஸ்
செய்யும் டூத் பிரஷ்களை செலக்ட் செய்து கொண்டிருந்தார்.
இவருக்கு தான் இன்னும் கல்யாணமாகலையே யாருக்கு
இவர் வாங்குகிறார்?

வெளியில் வருமுன் அவரிடம் "அந்த குழந்தைகள் பிரஷை
யாருக்கு வாங்குறீங்க?" என்று தெரியாதது போல் கேட்டேன்.
நாமும் தெரிஞ்சுக்கலாம்ல!

"அது எனக்குத் தான்"

"என்னது உங்களுக்கா? ஏன்?"

"அதொன்னுமில்லீங்க, எப்போதும் பெரியவர்கள் யூஸ் செய்யும்
பிரஷை தான் வாங்குவேன். ஆனா அது ஈறுகளை கிழிக்கிறது.
சிறிது நாளிலேயே அதன் குச்சங்கள் திருகிக் கொண்டு டான்ஸ்
ஆடுவது போல் நிற்கின்றன. ஆனா பாருங்க இந்த சின்ன
பிள்ளைங்க யூஸ் செய்ற பிரஷை கொண்டு பல் துலக்கினால், ஈறுகளையும் கிழிப்பதில்லை. குச்சங்களும் வளைவதில்லை"
என்றார்.

இது புது விஷயமா இருக்கே என்று கேட்டுக் கொண்டேன்.

அப்புறம் "பல் விளக்கிய பின் ஈறுகளை மெதுவாக தேய்த்துக் கொடுக்கணும். அப்ப தான் பற்கள் உறுதிபடும்" என்றார்.

இந்த விஷயம் ஏற்கனவே 'கவிப்பேரரசு வைரமுத்து' நமக்கு
கவிதையில் சொல்லிக் கொடுத்திருந்ததால், தெரிந்திருந்தாலும்
தெரியாதது போல் அதையும் கேட்டுக் கொண்டேன்.

"உங்க பதிவுலகத்தில் நிறைய பேர காணலியே ஏன் என்னாச்சு?!"
என்று ஒரு புகாரையும் வாசித்தார்.

என்ன சொல்றது??

"அடுத்தப் பதிவில் அதைப் பற்றி ஆராய்வோம்" என்றேன்.